Category Archives: தேனி

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர்

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி மாவட்டம்.

+91- 97895 27068, 94420 22281 (மாற்றங்களுகுட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சனீஸ்வரன்
தல விருட்சம் விடத்தை
தல புஷ்பம் கருங்குவளை
தல இலை வன்னிஇலை
வாகனம் காகம்
தானியம் எள்
பழமை 1000 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் செண்பகநல்லூர்
ஊர் குச்சனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது. அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தான். அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான். புத்திசாலியான வளர்ப்பு மகன் சந்திரவதனனுக்கே முடி சூட்டப்பட்டது. இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான். “வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடுஎன்று வேண்டினான். சனீஸ்வர பவகவான் அவனது நியாயத்தை உணர்ந்து ஏழரை நாழிகை மட்டும் அவனை பிடித்துக்கொள்வதாகக் கூறி பல கஷ்டங்களைக் கொடுத்தார். பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களைப் பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை என்று கூறி மறைந்தார். பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூறை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறகிறது. இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று.

சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர்

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.

+91- 4554-249 480 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாணிக்கவாசகர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சின்னமனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் வசித்த சம்புபாதசிரியர், சிவஞானவதி தம்பதியரின் மகன் வாதவூரார். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக்கி, “தென்னவன் பிரமராயன்என்று பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து தனது படைக்கு குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.

அவர் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) தலத்தை அடைந்தபோது, ஒரு குருந்த மரத்தின் அடியில் சிவபெருமான், குருவாக இருந்து சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக்கண்ட வாதவூரார் தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, திருவடியில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

சிவனும் அவருக்கு உபதேசம் செய்தார். மகிழ்ந்த மாணிக்கவாசகர் அவரைப் பற்றி பாடினார். அந்த பதிகங்களின் வாசகங்கள் மாணிக்கம் போல இருந்ததால் சிவன் அவருக்கு மாணிக்கவாசகர்என பெயர் சூட்டினார். தன்னை சிவனிடமே ஒப்படைத்த மாணிக்கவாசகர், மன்னன் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். அவருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும் அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரைத் தண்டித்தான் மன்னன். சிவன், அவரை விடுவிக்கத் திருவிளையாடல் செய்து, தனது பக்தனின் பெருமையை ஊரறியச் செய்தார். இப்படி புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இங்கு மூலவராக அருளுகிறார்.