Category Archives: தேனி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிப்பட்டி

அருள்மிகு , தேனி மாவட்டம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்.

+91- 99527 66408, 94435 01421, 94434 47458

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

சிவனடியார்களாகவும், சிவனின் அம்சமாகவும் தோன்றியவர்கள் சித்தர்கள். இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த சித்தர்களில் பலர் நம்நாட்டில் பல சிவத்தலங்களை தரிசித்திருந்தாலும், மதுரை மீனாட்சியிடமும், சுந்தரேஸ்வரரிடமும் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டிருந்தனர். எனவே இவர்கள் நினைத்த போதெல்லாம் அன்னை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்க விரும்பினர்.
பாண்டியர்களின் தலை நகராக மதுரை விளங்கியதால், இரவும் பகலும் மக்கள் நடமாட்டத்துடன் இருந்தது. இதனால் சித்தர்களால் மதுரையில் அமைதியாகத் தங்கி மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க இயலவில்லை. எனவே இவர்கள் மதுரைக்கு அருகில் அமைதியான சூழ்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இருப்பதை அறிந்தனர். உடனே அவர்கள் ஆண்டிகள் கோலத்தில் அங்கு சென்று தங்கி, தியானம் செய்வது, சிவபூஜை செய்வது என்ற சிவத் தொண்டில் ஈடுபட்டனர். அத்துடன் தாங்கள் விரும்பிய நேரத்தில் எல்லாம் மதுரைக்கு வந்துமீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்து வந்தனர். ஆண்டிகளாக சித்தர்கள் இங்கு வந்து தங்கியதால், இத்தலத்திற்கு ஆண்டிப்பட்டி என்ற பெயர் ஏற்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. மதுரை மீனாட்சி கோயில் போல, மிகவும் பழமையான இத்தலத்தில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

இவர்களில் சிவனாண்டி என்ற சித்தரும் ஒருவர்.இவர் பல காலம் இங்கு தங்கி சித்து விளையாட்டுக்கள் செய்து வந்தார். இவரது ஜீவ சமாதி இங்குள்ளது. இந்த சமாதிக்கு மேல் இத்தலத்தின் விருட்சமான வில்வமரம் அமைந்துள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இத்தலவிருட்சத்தின் கீழ் தரப்படும் விபூதியை பூசினால் நாள்பட்ட நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

மாணிக்கவாசகர் திருக்கோயில் , சின்னமனூர்

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் , சின்னமனூர், தேனி மாவட்டம்.

காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாணிக்கவாசகர்
ஊர் சின்னமனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் வசித்த சம்புபாதசிரியர், சிவஞானவதி தம்பதியரின் மகன் வாதவூரார். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக்கி, “தென்னவன் பிரமராயன்என்று பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து, தனது படைக்கு குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.
அவர் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) தலத்தை அடைந்தபோது, ஒரு குருந்த மரத்தின் அடியில் சிவபெருமான், குருவாக இருந்து சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக்கண்ட வாதவூரார் தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, திருவடியில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.


சிவனும் அவருக்கு உபதேசம் செய்தார். மகிழ்ந்த மாணிக்கவாசகர் அவரைப் பற்றிப் பாடினார். அந்த பதிகங்களின் வாசகங்கள் மாணிக்கம் போல இருந்ததால் சிவன் அவருக்கு மாணிக்கவாசகர்என பெயர் சூட்டினார். தன்னை சிவனிடமே ஒப்படைத்த மாணிக்கவாசகர், மன்னன் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். அவருக்காக, சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும் அவை நரிகளாக மாறவே, மன்னன் மாணிக்கவாசகரைத் தண்டித்தான். சிவன், அவரை விடுவிக்க திருவிளையாடல் செய்து, தனது பக்தனின் பெருமையை ஊரறியச் செய்தார். இப்படி புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இங்கு மூலவராக அருளுகிறார். தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப் படுகிறது. விழாக்களின்போது இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழிமாத உத்திர நட்சத்திரத்தில் மாணிக்கவாசகர், நடராஜர் இருவரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். குருபூஜையன்று தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளவர்கள், இங்கு திருவாசகத்தின் திருச்சாழல்பதிகத்தை பாடி வேண்டுகின்றனர். குருபூஜையின்போது, உச்சிக்காலத்தில் மகேஸ்வர பூஜைஎன்னும், சிவனடியார் பூஜை நடக்கும். சிவனடியார்களை சிவனாக பாவித்து திருநீறு, சந்தனம் பூசி மலர் தூவி தீபாராதனை செய்து விருந்து படைக்கின்றனர்.


சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவர் சிவலிங்கத்தை வணங்கி நின்றபடி இருக்கிறார். சிவன் சன்னதி முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியான கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். கோரை பற்களுடன் கூடிய மற்றொரு சனீஸ்வரரை, “கோரசனீஸ்வரர்என்கின்றனர். மாணிக்கவாசகர் நின்றகோலத்தில் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார். ருத்ராட்ச மாலை அணிந்து, வலது கையில் ஜெபமாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏடுடன் இருக்கிறார். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி இருவரும் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருமலையராயப்பெருமாள் திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.

திருவிழா : ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
பிரார்த்தனை : அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கவும், திக்குவாய் குறை உள்ளவர்கள் சரியாகவும் இங்கு பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.