Category Archives: தேனி

அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சின்னமனூர்

அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.

+91- 4554 – 247 486, 247 134 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இலட்சுமிநாராயணர்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

தல விருட்சம்

மகிழம்

தீர்த்தம்

சுரபி நதி

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

அரிகேசவநல்லூர்

ஊர்

சின்னமனூர்

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர்கள், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் அமைப்பில் இங்கு சுரபி நதிக்கரையில் சிலை வடித்துக் கோயில் எழுப்பினர். அந்நியர் படையெடுப்பின்போது, கோயில் சேதமடைந்தது. பின்பு இப்பகுதியை சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, “லட்சுமி நாராயணர்என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.

கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு சன்னதி அமைக்க முற்பட்டனர். அதற்காக சிலை வடித்து, சன்னதியும் எழுப்பப்பட்டது. சன்னதியில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் முன்பாக, பக்தர் ஒருவர் மூலமாக அசரீரியாக ஒலித்த பெருமாள், தன் பக்தனான ஆஞ்சநேயரை தனக்கு அருகில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் சிலையை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். தற்போதும் ஆஞ்சநேயரை, மூலஸ்தானத்தில் சுவாமிக்கு அருகில் தரிசிக்கலாம். இவர் சுவாமியின் பாதத்தைவிட, உயரம் குறைவானவராக காட்சி தருவது விசேஷம். இவருக்காக அமைக்கப்பட்ட சன்னதி, பிரகாரத்தில்இருக்கிறது. அனுமன் ஜெயந்தியன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் இவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம்.

அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கோம்பை

அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கோம்பை, தேனி மாவட்டம்.

+91-4554- 252891 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 11 முதல் 1 மணிவரை நடை திறந்திருக்கும்.

மூலவர்

திருமலைராயர் (அரங்கநாதர்)

உற்சவர்

ஸ்ரீரெங்கநாதர்

தாயார்

ஸ்ரீதேவி,பூதேவி

தீர்த்தம்

அருவி நீர்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

முடக்கு

ஊர்

கோம்பை

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் கோம்பை நகர் மேற்கு பகுதி தொடக்கத்தில் ஏராளமான பசுமாட்டுத்தொழுவங்கள் இருந்தன. இங்கிருந்து கறந்த பாலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு தினமும் ஒரு பால்காரர் கொண்டு போய்க் கொடுப்பார். அவர் பால் கொண்டு செல்லும் போதெல்லாம் ஓரிடத்தில் தினமும் கால் இடறி பால் கொட்டி வீணாகியது. ஒரு நாள் அவர் பாலுடன் கோடரியையும் எடுத்துச் சென்று கால் தட்டிய இடத்திலிருந்த மரத்தின் வேரை வெட்டினார். அதிலிருந்து வந்த இரத்தத்தை பார்த்த பால்காரர் பயந்து போய் வீட்டிற்கு திரும்பினார். அன்று இரவிலேயே ஊர் ஜமீன்தார் கனவில் தோன்றிய திருமலைராயப் பெருமாள், அன்றைய தினம் பால்காரர் மூலம் இராமக்கல் மலையில் சோதனையாக நடந்த நிகழ்ச்சியையும், அவ்விடத்தில் தான் சுயம்புவாக எழுந்தருளியதைப் பற்றியும் கூறி கோயில் எழுப்பும்படி அருளினார். பால்காரர் மூலம் நடந்த சம்பவத்தையும், ஜமீன் கனவில் கோயில் எழுப்பவும் பெருமாள்கூறியதை அறிந்த ஊர் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அதன்பின், மக்கள் அனைவரும் இராமக்கல் மலைக்குச் சென்று பெருமாள் காட்டிய அதே இடத்தில் கோயிலைக் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

திருமலைராயப்பெருமாள் சித்து புரிந்த இராமக்கல் மலை, தொலைவில் இருந்து பார்க்கும் போது சாந்த சொரூபமான மனிதனின் முகம் போன்றும், அதில் புடைப்பை கோடரியால் வெட்டிய போது இரத்தம் தெரித்த பகுதி இராமநாமம் இட்டது போலவும் காட்சியளிப்பது, இறைவனின் அற்புதச்செயலை வெளிப்படுத்துவதாக உள்ளது. இங்கு உள்ள பெருமாள் வருடந்தோறும் வளர்ந்துகொண்டே வருவதாக கோயில் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாள் ஊரிலிருந்து சுமார் 6 கி,மீ., தூரத்தில் ஊரை நோக்கியபடி அமைந்துள்ளார்.