அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கோம்பை

அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கோம்பை, தேனி மாவட்டம்.

+91-4554- 252891 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 11 முதல் 1 மணிவரை நடை திறந்திருக்கும்.

மூலவர்

திருமலைராயர் (அரங்கநாதர்)

உற்சவர்

ஸ்ரீரெங்கநாதர்

தாயார்

ஸ்ரீதேவி,பூதேவி

தீர்த்தம்

அருவி நீர்

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

முடக்கு

ஊர்

கோம்பை

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் கோம்பை நகர் மேற்கு பகுதி தொடக்கத்தில் ஏராளமான பசுமாட்டுத்தொழுவங்கள் இருந்தன. இங்கிருந்து கறந்த பாலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு தினமும் ஒரு பால்காரர் கொண்டு போய்க் கொடுப்பார். அவர் பால் கொண்டு செல்லும் போதெல்லாம் ஓரிடத்தில் தினமும் கால் இடறி பால் கொட்டி வீணாகியது. ஒரு நாள் அவர் பாலுடன் கோடரியையும் எடுத்துச் சென்று கால் தட்டிய இடத்திலிருந்த மரத்தின் வேரை வெட்டினார். அதிலிருந்து வந்த இரத்தத்தை பார்த்த பால்காரர் பயந்து போய் வீட்டிற்கு திரும்பினார். அன்று இரவிலேயே ஊர் ஜமீன்தார் கனவில் தோன்றிய திருமலைராயப் பெருமாள், அன்றைய தினம் பால்காரர் மூலம் இராமக்கல் மலையில் சோதனையாக நடந்த நிகழ்ச்சியையும், அவ்விடத்தில் தான் சுயம்புவாக எழுந்தருளியதைப் பற்றியும் கூறி கோயில் எழுப்பும்படி அருளினார். பால்காரர் மூலம் நடந்த சம்பவத்தையும், ஜமீன் கனவில் கோயில் எழுப்பவும் பெருமாள்கூறியதை அறிந்த ஊர் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அதன்பின், மக்கள் அனைவரும் இராமக்கல் மலைக்குச் சென்று பெருமாள் காட்டிய அதே இடத்தில் கோயிலைக் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

திருமலைராயப்பெருமாள் சித்து புரிந்த இராமக்கல் மலை, தொலைவில் இருந்து பார்க்கும் போது சாந்த சொரூபமான மனிதனின் முகம் போன்றும், அதில் புடைப்பை கோடரியால் வெட்டிய போது இரத்தம் தெரித்த பகுதி இராமநாமம் இட்டது போலவும் காட்சியளிப்பது, இறைவனின் அற்புதச்செயலை வெளிப்படுத்துவதாக உள்ளது. இங்கு உள்ள பெருமாள் வருடந்தோறும் வளர்ந்துகொண்டே வருவதாக கோயில் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாள் ஊரிலிருந்து சுமார் 6 கி,மீ., தூரத்தில் ஊரை நோக்கியபடி அமைந்துள்ளார்.

இத்தலத்தில் வீற்று அருள்பாலிக்கும் திருமலைராயப்பெருமாள் தென்பகுதியில் தலையை வைத்தும், வடக்குப்பக்கம் காலை வைத்தும் கிழக்கு நோக்கியபடி சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கான உற்சவர் ஊரின் மையத்தில் உள்ள கோயிலில் அமைந்துள்ளார். சுற்றுப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், நவக்கிரகம் மற்றும் விநாயகருக்கென தனிச்சன்னதிகள் உள்ளன. இத்தலவிநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

வைகாசியில் தேரோட்டம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, மார்கழியில் தனுர் மாத சிறப்பு வழிபாடு, புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

கோரிக்கைகள்:

இத்தலத்தில் எண்ணி மனம் உருகி வேண்டும் காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடக்கும். சகல பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

தொழில் விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு பால்குடம் எடுக்கப்படுகிறது. பாலபிஷேகம், முடிகாணிக்கை, அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *