அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர்

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.

+91- 4554-249 480 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாணிக்கவாசகர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சின்னமனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் வசித்த சம்புபாதசிரியர், சிவஞானவதி தம்பதியரின் மகன் வாதவூரார். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக்கி, “தென்னவன் பிரமராயன்என்று பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து தனது படைக்கு குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.

அவர் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) தலத்தை அடைந்தபோது, ஒரு குருந்த மரத்தின் அடியில் சிவபெருமான், குருவாக இருந்து சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக்கண்ட வாதவூரார் தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, திருவடியில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

சிவனும் அவருக்கு உபதேசம் செய்தார். மகிழ்ந்த மாணிக்கவாசகர் அவரைப் பற்றி பாடினார். அந்த பதிகங்களின் வாசகங்கள் மாணிக்கம் போல இருந்ததால் சிவன் அவருக்கு மாணிக்கவாசகர்என பெயர் சூட்டினார். தன்னை சிவனிடமே ஒப்படைத்த மாணிக்கவாசகர், மன்னன் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். அவருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும் அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரைத் தண்டித்தான் மன்னன். சிவன், அவரை விடுவிக்கத் திருவிளையாடல் செய்து, தனது பக்தனின் பெருமையை ஊரறியச் செய்தார். இப்படி புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இங்கு மூலவராக அருளுகிறார்.

மாணிக்கவாசகர் நின்றகோலத்தில் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார். உருத்ராட்ச மாலை அணிந்து, வலது கையில் ஜெபமாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏடுடன் இருக்கிறார். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி இருவரும் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர். இவரிடம் வேண்டிக் கொள்ள அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு வேண்டிக் கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும். ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப் படுகிறது. விழாக்களின்போது இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழிமாத உத்திர நட்சத்திரத்தில் மாணிக்கவாசகர், நடராஜர் இருவரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். குருபூஜையன்று தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளவர்கள், இங்கு திருவாசகத்தின் திருச்சாழல்பதிகத்தைப் பாடி வேண்டுகின்றனர்.

சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவர் சிவலிங்கத்தை வணங்கி நின்றபடி இருக்கிறார். அருகில் ஒரு விநாயகரும் இருக்கிறார். சண்டிகேஸ்வரரின் நின்ற கோலத்தை காண்பது அபூர்வம். சிவன் சன்னதி முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியானக் கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். கோரைப் பற்களுடன் கூடிய மற்றொரு சனீஸ்வரரை, “கோரசனீஸ்வரர்என்கின்றனர்.

குருபூஜையின்போது, உச்சிக்காலத்தில் மகேஸ்வர பூஜைஎன்னும், சிவனடியார் பூஜை நடக்கும். சிவனடியார்களை சிவனாக பாவித்து திருநீறு, சந்தனம் பூசி மலர் தூவி தீபாராதனை செய்து விருந்து படைக்கின்றனர்.

இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருமலையராயப்பெருமாள் திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.

திருவிழா:

ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

வேண்டுகோள்:

அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கவும், திக்குவாய் குறை உள்ளவர்கள் சரியாகவும் இங்கு பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் புத்தாடை சாத்தி, அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *