Category Archives: கேரளா

அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு

அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு– 679 303 (திருவிச்சிக்கோடு), பாலக்காடு மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 98954 03524 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்)
தாயார் வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்)
தீர்த்தம் சக்கரதீர்த்தம்
பழமை 2000-3000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமிற்றக்கோடு
ஊர் திருவித்துவக்கோடு
மாவட்டம் பாலக்காடு
மாநிலம் கேரளா

மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தென்னிந்தியப் பகுதிக்கு வந்தபோது இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தை கண்டனர். அங்கிருந்த அழகும், தெய்வீகம் கலந்த அமைதியும் கண்ட அவர்கள் சில காலம் அங்கேயே தங்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காகக் கோயில் கட்டிச் சிலைகளை அமைத்தனர். முதலில் அர்ஜுனன் மகாவிஷ்ணுவின் சிலையை அமைத்தான். இதுவே மூலஸ்தானமாக கருதப்படுகிறது.

சுற்றுப்பகுதியில் தர்மர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், நகுல சகாதேவர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கிறார்கள். கோயிலில் நுழைந்தவுடன் கணபதியும் தெட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கின்றனர். சாஸ்தா, நாகர், பகவதி தேவிக்கு தனித்தனி சன்னதி உள்ளது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தங்களது வன வாசத்தில் பெரும்பாலான நாட்களில் இங்கேயே தங்கிப் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

வெகு காலத்திற்கு பின் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.

அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்

அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்– 676 301, மலப்புரம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 494 – 260 2157 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாவாய் முகுந்தன் (நாராயணன்)
தாயார் மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)
தீர்த்தம் கமல தடாகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருநாவாய்
மாவட்டம் மலப்புரம்
மாநிலம் கேரளா

முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர். இதில் ஒருமுறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையைக் கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் இலட்சுமி தேவியை அழைத்து, “இனிமேல் பூப்பறிக்க வேண்டாம். கஜேந்திரனுக்காக விட்டுக்கொடுஎன்று கூறினார். இலட்சுமியும் அதன்படி செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப்பறித்து, பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், இலட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் இலட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.