Category Archives: கேரளா

அருள்மிகு நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயில், கூத்தாட்டு குளம்

அருள்மிகு நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயில், கூத்தாட்டு குளம், எர்ணாகுளம் மாவட்டம்

காலை 5- 9 மணி, மாலை 5.30 – இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

நீங்கள் கோயிலுக்குப் போனால் பால், பழம், சர்க்கரைப் பொங்கல் இன்னும் சிலவற்றை நைவேத்யமாக படைத்திருப்பீர்கள். ஆனால், கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக் குளம் என்ற இடத்தில் உள்ள நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயிலில், நோயாளிகள் தாங்கள் பயன்படுத்தும் மருந்தை சுவாமி முன்பு வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த கோயிலில் தினமும் அம்மனுக்கு மருந்து நைவேத்யமும் செய்கிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் திருமந்தாம்குந்து என்ற இடத்தில் நெல்லிக்காட்டு இல்ல பரம்பரை நம்பூதிரிகள் வைத்தியம் செய்து வந்தனர். அங்குள்ள பெரியவர் ஒருவரின் கனவில் நோய் தீர்க்கும் தெய்வமான, தன்வந்திரி தோன்றி, “தளிக்குந்நுஎன்ற இடத்தில் பலர் நோயால் அவதிப்படுகின்றனர். நீங்கள் சென்று காப்பாற்றுங்கள். அங்கு நிரந்தரமாக தங்குங்கள். மேற்கு நோக்கிய சிவன் கோயில் அங்கு இருக்கும்,” என்றார்.

பெரியவர் நம்பூதிரி, இந்த விஷயத்தைக் குடும்பத்தினருக்கு தெரிவிக்க நெல்லிக்காட்டு குடும்பம் தளிக்குந்நு நோக்கி புறப்பட்டது. கூடவே தங்கள் குடும்பக் கடவுளான அம்மன் விக்ரகத்தையும் எடுத்துச் சென்றனர். வழியில் ஒரு முனிவர் குறுக்கிட்டு வழிகாட்டினார். அவர்கள் தளிக்குந்நு சிவன் கோயில் அருகில் கூத்தாட்டுகுளம் என்ற இடத்தில் தங்கி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். அந்த நம்பூதிரி குடும்பம் விஷக் கடிக்கு சிகிச்சை செய்வதில் பிரபலமானது. எனவே பாம்பு கடித்து ஒருவர் சிகிச்சைக்கு வந்த போது, புதிய இடத்தில் சிகிச்சை தரச் சற்று தயங்கிய நம்பூதிரி பின்னர் சிகிச்சை அளித்தார். வந்தவர் குணமடைந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அங்குள்ள கால்நடைகள் எல்லாம் இறந்தன. இதனால் தலைமை நம்பூதிரி மனம் உடைந்து தொடர் பஜனை பாடிக்கொண்டே இருந்தார். அப்போது ஏற்கனவே சந்தித்த முனிவர் வந்து, இனி விஷக்கடிக்கு சிகிச்சை தர வேண்டாம், கண் சிகிச்சை செய்யுங்கள்என்று கூறி கண் மருத்துவத்திற்கான ஓலைச் சுவடிகளை அவரிடம் தந்தார். முனிவரது கட்டளைப்படி தங்களோடு எடுத்து வந்த பகவதி(பத்ரகாளி) அம்மன் விக்ரகத்தை கூத்தாட்டு குளத்தில் பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர்.

அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், ஆலப்புழை

அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், ஆலப்புழை – 688001, ஆலப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 477 – 226 2025, 225 1756

காலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ராஜராஜேஸ்வரி , முல்லைக்கல் பகவதி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆலப்புழை

மாவட்டம்:- ஆழப்புழா

மாநிலம்: – கேரளா

செண்பகசேரி அரசனுக்கு இத்தலம் அரண்மனையாக இருந்தது. இவ்வரசன் காலத்தில் இத்தலத்தில் அம்பாள் பெண்ணாக, வனதுர்க்கையாக அவதரித்து, அவளது சகோதரியுடன் முல்லைக்கொடி அருகே தினமும் விளையாடி வந்தாள்.

ஒரு முறை அந்தக் கொடி அருகே அம்மனின் விக்ரகம் கிடைத்தது. ஆரம்பத்தில் துர்க்கையாக இருந்தவள், பின்னர் பிரசன்னத்தில் இவள் அன்னதானப் பிரபு என்பதை அறிந்தனர். எனவே இவளுக்கு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் சூட்டி இத்தலத்திலேயே பிரதிட்டை செய்யப்பட்டாள்.

அம்பாள் அசரீரியாக மன்னனிடம், தான் இங்கு முல்லைக் கரை அருகே அருள்பாலிப்பதாவும், கோயில் கட்டி பிரதிட்டை செய்யும்படியும் கூறினார். மன்னனும் அப்படியே கோயில் கட்டி அம்பாளை பிரதிட்டை செய்யும்போது கருவறையின் மேல்பகுதி மூடப்பட்டது. அன்று இரவே மேல்கூரை தீப்பிடித்தது.

பிரசன்னம் கேட்டபோது, தான் குழந்தை வடிவில் இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரம், ஆகாயம், காற்று, மழை ஆகியவற்றை நான் நேரடியாகப் பார்த்து அனுபவிக்க வேண்டுமெனவும், மேற்கூரை இல்லாமல் கருவறையை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதால் இக்கோயிலுக்கு மேற்கூரை கிடையாது.

இங்கு 5 அடி உயர அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

மழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூரையை மூடுகிறார்கள். இந்த உலகையே ஆளும் அம்மன் மழையிலும், வெயிலிலும் நிற்கிறாள்.

திருவிழாவின்போது, 41 நாளும் அம்மனுக்கு சந்தன அபிசேகம் நடைபெறும். இங்கு கணேசர், முருகன், கிருட்டிணர், ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரகம் ஆகிய சன்னதிகள் உள்ளன.

கார்த்திகை முதல் தேதி முதல் மார்கழி 11 வரை 41 நாள் களபாபிஷேகம்(சந்தனம்) நடக்கும்.

மார்கழி 1 முதல்11 வரை உள்ள தேதிகளில் சிறப்பு பூசை, அர்ச்சனை நடக்கும்.

மார்கழி 11ம் தேதி பீமா ஜுவல்லரி பூசை.

சரசுவதி பூசை நாட்களில் நவராத்திரித் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

தினமும் பஞ்சாமிர்த அபிசேகம் நடைபெறும்.

திருமண தடை நீங்கவும், குழந்தைச் செல்வம் கிடைக்கவும் வேண்டிக்கொள்கின்றனர்.

கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு சந்தனத்தில் அலங்காரம் செய்கிறார்கள்.