Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர்

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
*************************************************************************************

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – காளியம்மன்

அம்மன்: – துர்கை, காளியம்மன், மாரியம்மன், அஷ்டபுஜகாளி, பாலசுகாம்பாள், அபிராமி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – காளியூர்

மாவட்டம்: – நாகப்பட்டினம்

மாநிலம்: – தமிழ்நாடு

இந்த ஊர் ஒரு காலத்தில் சீனிவாசபுரம் என அழைக்கப்பட்டது . திடீரென ஒரு நாள் ஊர்மக்கள் பலரும் நச்சுக்காய்ச்சலாலும், வாந்திபேதியாலும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளம் வந்து வயல்களுக்குள் பாய்ந்து பயிர்களையெல்லாம் அழித்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ஊர் எல்லையில் தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் துயர்களைப் போக்க இங்கு காளி எழுந்தருளினாள். மகிசாசுரனை வதம் செய்த தேவி எருமையென வந்த அசுரனின் தலை பூமியில் விழக்கூடாது; விழுந்தால் பூமிக்கு ஆபத்து என்று அசுரனின் தலையைக் கொய்ததுடன், பூமியில் விழாமல் கரங்களில் ஏந்தி நின்றாளாம். அப்படி அவன் நின்ற இடம் தான் கிடாத்தலைமேடு என்று திகழ்கிறது. இங்கே காளிதேவி, துர்கையாக எழுந்தருள்கிறாள். மிகுந்த உக்கிரமும், அளவற்ற கருணையும் கொண்ட துர்க்கையாக அனைவரையும் காக்கிறாள். ஊரின் நுழைவுவாயிலில் மந்தகரை காளியம்மனும், இன்னொரு எல்லையில் நத்தம் மாரியம்மனும், வடக்கு எல்லையில் வடகாளியம்மனும் வீற்றிருக்கின்றனர். இந்த வடகாளியம்மனுக்கு வெக்காளியம்மன், பத்ரகாளியம்மன் என பல திருநாமங்கள் உண்டு.

காளியூர் கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் நான்கு தேவியராகக் கோயில் கொண்டு ஊரை செழிக்கச் செய்வது மட்டுமின்றி, ஊருக்கு நடுவிலும் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள் எட்டுக்கை காளி. வடக்கு எல்லையில் உள்ள வடகாளியம்மன் கோயிலில் சப்தகன்னியர்கள் பரிகார தெய்வங்களாக உள்ளனர். ஐந்து காளிகளும், இரண்டு அம்பிகைகளும் அருள்பாலிக்கும் அற்புத தலம். கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் சாந்தமுகமாக காட்சியளிக்கிறாள். இவளை மகாகாளி எனப் போற்றுகின்றனர்.

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிப்பட்டி

அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிப்பட்டி-625 512, தேனி மாவட்டம்.
*****************************************************************************************

+91 90429 60299, 92451 91981 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை சாத்துவதில்லை.

மூலவர்: – காளியம்மன்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆண்டிப்பட்டி

மாவட்டம்: – தேனி

மாநிலம்: – தமிழ்நாடு

ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆண்டிப்பட்டி , முட்புதர் சூழ்ந்த பகுதியாக இருந்தது. ஊருக்கு நடுவில் ஒரு திரிசூலத்தை வைத்து, பக்தர்கள் காளியம்மனாக வழிபாடு செய்து வந்தனர். இங்கு வசித்த பேரிநாயக்கர் என்ற முதியவரின் கனவில் தோன்றிய காளி,”கேரளாவில் சோட்டானிக்கரையிலிருந்து ஆற்றில் அடித்துவரப்பட்ட எனது சிலை, வடமலை நாயக்கன் பட்டியில் வைகை ஆற்றுமணலில் புதைந்து கிடக்கிறது. பதினாறு அடி தோண்டினால், என் சிலை கிடைக்கும். அதை எடுத்து வந்து ஆலயம் அமைத்து வழிபாடு செய்யுங்கள்என்றாள். மறுநாள் பேரிநாயக்கரின் தலைமையில் ஊர்மக்கள் சென்று அம்பாள் சிலையை எடுத்து வந்து ஆலயம் அமைத்தனர். அவளுக்கு காளிஎன்று பெயர் சூட்டினர்.

நீதியின் காவல்தெய்வம் :

கருவறையில் நீதியை நிலைநாட்டுபவளாக காளி வீற்றிருக்கிறாள். ஐந்து தலைநாகம் இவளுக்கு குடைபிடித்துள்ளது. வலது காலை மடித்தும், இடது காலை தரையில் ஊன்றியும் உள்ள இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில் உடுக்கை, பாம்பு, சூலம், கபாலம் ஏந்தியிருக்கிறாள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுபவளாக இருக்கும் இவளை வழிபட்ட பின்னரே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஊர்க்காவல் தெய்வங்களுக்குத் திருவிழா நடக்கும். தனக்கு குறை நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளும் இவள், தன் பக்தர்களுக்கு யாராவது தீங்கு எண்ணினால் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.