Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில், சிறுகுடி

அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில், சிறுகுடி– 624 404, திண்டுக்கல் மாவட்டம்
****************************************************************************************************

மூலவர்: – முத்தாலம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – சிறுகுடி

மாவட்டம்: – திண்டுக்கல்

மாநிலம்: – தமிழ்நாடு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் தெய்வ வழிபாடும் பக்தியும் கொண்டு, நீதி,நேர்மை நிலைக்க அரசாட்சி மேற்கொண்டு வந்தார் மாமன்னர் திருமலை நாயக்கர். இவரின் கீழ், நத்தத்தைத் தலைநகராக்கி ஆட்சி செலுத்திய ஜமீன் சருகு துந்துமி லிங்கமநாயக்கரின் முயற்சியால் சிறுகுடியில் இக்கோயில் கட்டப்பட்டது. ஐயனார் மலையில் மணக்கோலத்தில் மலையலங்கார சுவாமியையும் செம்பாயி அம்மனையும் மற்றும் பரிவார தெய்வங்களையும் மண்ணினால் செய்து கட்டப்பட்டது. இதற்குப் பராமரிப்புக்காக நில புலன்களை மானியம் கொடுத்து திருப்பணியை நிறைவேற்றினர்.

சிறுகுடி, பசுமை நிறம் கொண்ட மலைகளால் சூழப் பட்டது. வாழை, மா, தென்னை நிறைந்து பயன் தரும் சோலைகள் நிறைந்தது. இங்கு வான் மழை முறையாக பெய்யும். நீர் வளம் சேரப்பெற்றதால் நிலவளம் நிறைந்தது. இவ்வாறு திகழும் இவ்வூரின் மையப்பகுதியில் அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது.

அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோவில், பள்ளிப்புரம்

அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோவில், பள்ளிப்புரம், ஆலப்புழை மாவட்டம், கேரளம்
*************************************************************************************************************

+91-478-255 2805, 94464 93183 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:மகாலட்சுமி

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் : பள்ளிப்புரம்

மாவட்டம் : ஆழப்புழா

மாநிலம்: கேரளா

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பகுதியில் நெசவுத்தொழில் செய்து வாழ்ந்து வந்த மக்கள் பிழைப்புக்காக சேத்தலா பகுதிக்கு வருகிறார்கள். இவர்கள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காலத்தில் மகாலட்சுமிக்கென தனிகோயில் கட்டி வழிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பின் இவர்கள் கேரளா வந்தவுடன் இங்கும் மகாலட்சுமியை தொடர்ந்து வழிபட விரும்பினார்கள்.இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மகாலட்சுமி இங்கு இருந்து அருள்பாலிக்கிறாள். இவள் காஞ்சிபுரத்திலிருந்து முதலை மூலமாக இத்தலத்திற்கு வந்துள்ளாள் எனப் புராணம் கூறுகிறது.

மகாலட்சுமி வந்து இறங்கிய இடத்தை இன்றும் பராமரித்து வருகிறார்கள். இந்த இடம் மிகப்பெரும் ஏரிக்கு அருகில் உள்ளது. ஏரியில் உள்ள நீர் உப்பாக இருக்கும். ஆனால் மகாலட்சுமி வந்து இறங்கிய இடம் மட்டும் சுவையான குடிநீராக உள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த முதலைக்கு உணவு கொடுத்து கோயில் அருகிலேயே வழிபட்டு வந்தார்களாம். அதன் பின் கல்லால் முதலையின் சிலையை வடித்து கோயில் கர்ப்பகிரகத்தின் அருகில் வைத்து விட்டார்கள்.

ஆயிரம் வருடம் பழமையான இங்கு அம்மன் கடவில் ஸ்ரீ மகாலட்சுமிஎன அழைக்கப்படுகிறாள். இவள் அட்ட ஐசுவரியங்களையும் கொடுக்கும் மகா சக்தியாக முன் கைகளில் நெல்கதிர், கிளியும், பின் கைகளில் சங்கு சக்கரமும் வைத்து அருள்பாலிக் கிறாள். கேரளாவில் மகாலட் சுமிக்கு என அமைந்திருக்கும் தனிக்கோயில் இதுதான். இதன் மேற்கூறையில் உள்ள சித்திரங்கள் அருமை.

அம்மன் கிழக்கு திசையில் சூரிய நாராயணனை பார்த்துள்ளாள். சூரிய உதயத்தின் போது மகாலட்சுமி வந்து இறங்கிய குளத்தில் உள்ள நீரை அருந்தி விட்டு, முகம் கை கால்களை கழுவி மகாலட்சுமியை தரிசித்தால் நாராயணனையும் சேர்த்து தம்பதி சமேதராக தரிசித்த பலன் கிட்டும். திருமணத்தடையும் நீங்கும் என்பது நம்பிக்கை.

கோயில் சுற்றுப்பகுதியில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி, சேத்திர பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கும். இத்தலத்தின் நுழைவு வாயிலில் ஒன்பது கிரகங்களுக்குமான அதிதேவதைகள் ஒரே இடத்தில் அருள்பாலிப்பது கோயிலின் தனி சிறப்பாகும். மகாலட்சுமியின் வாகனமான முதலையை கல்லால் வடித்து கோயில் கர்ப்பகிரகத்தின் அருகில் வைத்து விட்டார்கள்.

திருவிழா:

புரட்டாசியில் நவராத்திரி, மார்கழியில் 12 நாள் களபபூசை.” தை மகரசங்கராந்தி, தை புனர்பூச நட்சத்திரத்தில் பிரதிட்டை தின விழா, மாசி மகாசிவராத்திரி மற்றும் ஆடி மாதத்தில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் கிட்ட நாராயணனையும், மகாலட்சுமியையும் தரிசித்தால் பலன் கிட்டும்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

வழிகாட்டி:

ஆலப்புழையிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ளது சேர்த்தலா. அங்கிருந்து ஆட்டோ அல்லது தனியார் பஸ்களில் வடகிழக்கே 7 கி.மீ சென்றால் பள்ளிப்புரம் மகாலட்சுமி கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ளவை:

ஆலப்புழை ரயில் நிலையம்

கொச்சின் விமான நிலையம்

ஆலப்புழையில் தங்கி அங்கிருந்து கோயிலுக்கு சென்று வரலாம்.