Category Archives: ஆலயங்கள்

பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4362- 274476, 223 384

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரகதீசுவரர் , பெருவுடையார்
அம்மன் பெரியநாயகி, வராகியம்மன்
தல விருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் சிவகங்கை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

இராஜராஜசோழன் சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் அவருக்கு ஆத்மார்த்தமாக ஒரு கோயிலை கட்ட விரும்பினான்.

அந்த கோயில் பிரமாண்டமாக இதுவரை யாரும் கட்டாத அளவுக்கு கட்டவேண்டுமென நினைத்தான். அப்படிக் கட்டப்பட்ட கோயில் இந்த உலகம் வியக்கும் உன்னதமான கோயில் (கி.பி.985 – 1012).

இக்கோயிலைக் கட்ட வெளி மாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்துதான் கற்கள் அனைத்துமே கொண்டுவரப்பட்டிருக்கிறது. கற்களைச் செதுக்கி ஒரு வடிவத்துக்கு கொண்டு வர 25 வருடங்கள் ஆகியதாம். செதுக்கிய கற்களை எடுத்துப் பதப்படுத்த 9 வருடங்கள் ஆனதாம். ஆக மொத்தம் 34 வருடங்கள் ஆகியதாம். கோபுரம் மட்டுமே தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரமுடையது. அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்மமந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. ஒரே கல்லிலாலானது. இங்கிருந்து 7 கி.மீ.தூரத்திற்கு சாரபள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரே ஒரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனராம். இக்கோபுரம் மேலே உள்ள கலசத்தின் நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளின் கட்டிடக் கலை வல்லநர்கள் வந்து பார்த்து வியந்து போன கோயில் இது.

கருவூரார் என்பவர் சித்தர். இவர் அறிவுரைப்படிதான் இராஜராஜசோழன் இக்கோயிலை கட்டியதாக வரலாறு. கோயில் கட்டுவதற்கு முன்பு கருவூரார் இங்கு ரொம்ப காலமாக தியானத்தில் இருந்திருக்கிறார். கோயில் கட்டும்போது முதலில் சுவாமியின் மேல்பாணம் சரியாக பொருந்தவில்லையாம். கருவூரார் மிகவும் வருந்தி ஈசனை நினைத்து உருகி 11 திருவிசைப்பாக்களை பாடியபின்தான் பாணம் பொருந்தியதாகத் தகவல் ஒன்று கூறுகிறது. நாவினால் உமிழ்ந்த என்ற திருவிசைப்பா புகழ் பெற்றது. கருவூரார்க்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம்

அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்.

+91 97513 41108

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் பிரகதீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் பின்னை, வன்னி
தீர்த்தம் சிம்மக்கிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் அரியலூர்
மாநிலம் தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். தன் தந்தையைப்போல மிகச்சிறப்புடன் ஆண்டவன் முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012 – 1044) கங்கைகொண்டான், பண்டிதசோழன் முதலிய பட்டப் பெயர்களையுடையவன். இவனுடைய மகள் அம்மங்காதேவி. லட்சத்தீவையும் வென்ற சிறப்புடையவன். சோழர் தலைநகரான தஞ்சை, பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தவிர, காலந்தவறாது பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கேற்பட்டு, அதனால் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானைக் காணவிரும்பி போதெல்லாம் தடையும் உண்டாவதைக் கண்ட முதலாம் இராசேந்திர சோழன், சோழநாட்டின் மையப்பகுதியில் புதிய தலைநகரம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணி; முயன்றான். இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணித்து அதை கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணித் தன்படையை கங்கைநீர் கொண்டுவர வடநாட்டிற்கு அனுப்பிவைத்தான். அப்படையும் சென்று, வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் முதலாம் இராசேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான் கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்நீரால் புனிதப்படுத்தி அவ்வூரில் தன்தந்தை, தஞ்சையிற் கட்டியது போலவே ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகும். அவ்விடமே கங்கை கொண்ட சோழபுரம். முதலாம் இராசேந்திரன் முதல் மூன்றாம் இராசேந்திர சோழன் காலம் வரை இவ்வூர் சோழர் தலைநகராகத் திகழ்ந்தது.