பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4362- 274476, 223 384

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரகதீசுவரர் , பெருவுடையார்
அம்மன் பெரியநாயகி, வராகியம்மன்
தல விருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் சிவகங்கை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

இராஜராஜசோழன் சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் அவருக்கு ஆத்மார்த்தமாக ஒரு கோயிலை கட்ட விரும்பினான்.

அந்த கோயில் பிரமாண்டமாக இதுவரை யாரும் கட்டாத அளவுக்கு கட்டவேண்டுமென நினைத்தான். அப்படிக் கட்டப்பட்ட கோயில் இந்த உலகம் வியக்கும் உன்னதமான கோயில் (கி.பி.985 – 1012).

இக்கோயிலைக் கட்ட வெளி மாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்துதான் கற்கள் அனைத்துமே கொண்டுவரப்பட்டிருக்கிறது. கற்களைச் செதுக்கி ஒரு வடிவத்துக்கு கொண்டு வர 25 வருடங்கள் ஆகியதாம். செதுக்கிய கற்களை எடுத்துப் பதப்படுத்த 9 வருடங்கள் ஆனதாம். ஆக மொத்தம் 34 வருடங்கள் ஆகியதாம். கோபுரம் மட்டுமே தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரமுடையது. அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்மமந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. ஒரே கல்லிலாலானது. இங்கிருந்து 7 கி.மீ.தூரத்திற்கு சாரபள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரே ஒரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனராம். இக்கோபுரம் மேலே உள்ள கலசத்தின் நிழல் கீழே விழாதபடி கட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளின் கட்டிடக் கலை வல்லநர்கள் வந்து பார்த்து வியந்து போன கோயில் இது.

கருவூரார் என்பவர் சித்தர். இவர் அறிவுரைப்படிதான் இராஜராஜசோழன் இக்கோயிலை கட்டியதாக வரலாறு. கோயில் கட்டுவதற்கு முன்பு கருவூரார் இங்கு ரொம்ப காலமாக தியானத்தில் இருந்திருக்கிறார். கோயில் கட்டும்போது முதலில் சுவாமியின் மேல்பாணம் சரியாக பொருந்தவில்லையாம். கருவூரார் மிகவும் வருந்தி ஈசனை நினைத்து உருகி 11 திருவிசைப்பாக்களை பாடியபின்தான் பாணம் பொருந்தியதாகத் தகவல் ஒன்று கூறுகிறது. நாவினால் உமிழ்ந்த என்ற திருவிசைப்பா புகழ் பெற்றது. கருவூரார்க்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். காசியில்தான் வராகி அம்மன் சந்நிதி உள்ளது. காசியைத் தவிர வராகி அம்மன் சந்நிதி இங்கு மட்டுமே உள்ளது. அதிலும் தனி சந்நிதியாக இத்தலத்தில் மட்டுமே வீற்றிருக்கிறாள் என்பது முக்கியமான அம்சம். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப்படைத்தளபதி ஆவாள். சப்தமாதாக்களில் முக்கியமான பிரதானமான அம்மன் இவள்தான். கோர்ட் கேஸ் என்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள் இவளை வழிபட்டால் கண்டிப்பாக சிக்கல் தீரும் என்பது நம்பிக்கை. இராஜராஜ சோழன் இவளை வெற்றி தெய்வமாகப் பாவித்து வந்துள்ளார். அவர் எதைத் தொடங்கினாலும் இவளை அபிசேகம் செய்து வணங்கி விட்டுத்தான் ஆரம்பிப்பானாம். தற்போது இத்தலத்தில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெறும் ராஜராஜசோழன் விழாவே இத்தலத்தில் பூஜை செய்து விட்டுத்தான் தொடங்குகிறது.

இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர். 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது. மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி. இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.

அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர். இங்குள்ள நந்தியைப்போல் வேறு எங்கும் கிடையாது. அத்தனை பிரமாண்டமாக இருக்கும். இது 12 அடிஉயரம் உடையது. அகலம்(குறுக்களவு) 6 அடி ஆகும். உட்கார்ந்துள்ள நீளம் 9 அடி. இது திருச்சிக்கருகில் உள்ள பச்சைமலையிலிருந்து கல் எடுத்து வந்து இதை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். கோபுரத்தின் உச்சி நிழல் தரையில் விழாத வகையில் கட்டப்பட்டுள்ளது அதியசம்.

இங்குள்ள முருகன் சந்நிதி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. 500 வருடம் பழமையானது. விநாயகர் சந்நிதி மகாராஷ்டிர சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோபுரத்தின் அடித்தளத்தில் சோழ மன்னரின் மானியங்கள் திருப்பணிகள், தானங்கள் குறித்த செய்திகள் கல்வெட்டுக்களாக செதுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார்.

இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊர்கள் உண்டாயின.

கோயிலின் பெயரை அந்தந்த சுவாமியின் பெயரால் மீனாட்சி அம்மன் கோயில், கபாலீஸ்வரர் கோயில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், விருத்தகிரீஸ்வரர் கோயில் என குறிப்பிடுவார்கள். ஆனால், “பெரிய கோயில்என்ற அடைமொழியைப் பெற்றது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்.

இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டது.

இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் புத்தாடை சாத்த விரும்பினால், இதற்கென முன்னரே நெய்யச் சொல்லவேண்டும். அபிசேகம் செய்ய இலிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.

இங்கு தல விநாயகர் கன்னி விநாயகர் ஆவார். மூலவர் பிரகதீஸ்வரரை, ராஜராஜ சோழன் தன் காலத்தில் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற திருநாமத்தில் வணங்கியுள்ளான்.

உலகிலேயே இங்கு தான் சண்டிகேஸ்வரருக்கு மிகப்பெரிய தனி சன்னதி உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. சிவனே நவக்கிரக நாயகனாக விளங்குவதால், நவக்கிரகங்களுக்கு பதில் நவலிங்கங்கள் உள்ளன.

தோட பரிகாரங்கள் இந்த இலிங்கங்களுக்கே செய் யப்படுகிறது. கோபுரம் பிரமிடு அமைப்பில் இருப்பதாலும், ராஜராஜன் ஆத்மார்த்தமாக கட்டிய கோயில் என்பதாலும், வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கருவறையில் சந்திரகாந்தக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெப்பமாக இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

மிகப்பெரிய இலிங்கம் இருந்தாலும் இங்கு பீடம் இல்லை. முதலில் உள்ள மராட்டிய நுழைவு வாயில் கோபுரம் 1803ல் கட்டப்பட்டது. இதை அடுத்துள்ள கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில், 5 நிலை 7 கலசங்கள் உள்ளன.

மூன்றாவது உள்ள ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரத்தில் 3 நிலை, 5 கலசங்கள் உள்ளன. இது கி.பி. 988ல் கட்டப்பட்டது. கருவூர் சித்தர் சன்னதி பின்புறம் உள்ள மரத்தில் மரப்பல்லியை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ராஜராஜ சோழன் வானவன் மாதேவியின் மகன் ராஜேந்திர சோழன். இவன் தன் தந்தை கட்டிய பெரிய கோயிலைப் போலவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலை கட்டியுள்ளான். ராஜராஜனும் மற்றவர்களும் இக்கோயிலுக்கு 183 கிலோ தங்க பாத்திரங்கள், 22 கிலோ தங்க வைர நகைகள், 222 கிலோ வெள்ளி பாத்திரங்கள், பூஜைப்பொருள் மற்றும் நைவேத்தியத்திற்காக 40 கிராமங்கள், 10 ஆயிரம் பசுக்கள் தந்துள்ளனர். 16.5அடி உயரமும், 7.5 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய துவார பாலகர்கள் இங்குள்ளனர். இக்கோயிலின் கோபுர கலசம் 340 கிலோ எடையுள்ள செம்புத்தகடால் ஆனது. இதற்கு 12.5 கிலோ தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலை கட்டுவதற்கு ஒன்றரை லட்சம் டன் எடையுள்ள கற்கள் திருச்சி அருகே உள்ள மலையில் இருந்து எடுத்து வரப்பட்டது.

திருவிழா:

சித்திரை மாதம் பிரம்மோற்ஸவம் – 18 நாட்கள் திருவிழா சதய நட்சத்திரம் அன்று கொடி ஏற்றி சித்திரை நட்சத்திரம் அன்று தீர்த்தவாரி நடக்கும்.இது இத்தலத்தின் மிகச் சிறப்பான விழா ஆகும். ஐப்பசி ராஜராஜசோழன் பிறந்தாள் விழா சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு பிரமாண்டமான அபிஷேகம் நடைபெறும். அன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை தொடர்ந்து பூஜைகள் ,அபிஷேகம் நடந்தவண்ணம் இருக்கும். அன்று இரவு சுவாமி புறப்பாடு நடைபெறும். தவிர ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

வேண்டுகோள்:

இத்தலம் ராஜராஜ சோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோயில் என்பதால் இத்தலத்தில் என்ன பிரார்த்தனை செய்தாலும் இறையருளால் நிறைவேறும் என்பது இத்தலத்து பக்தர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

இங்குள்ள வராகி அம்மன் சந்நிதியில் பிரார்த்தனைக்காக பக்தர்கள் பெருமளவில் கூடுவர். இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது.

திருமணமாகதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடுகிறது.

குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது.

தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன. மூலவரான பெருவுடையாரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். மனஅமைதி கிடைக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறார்.

நேர்த்திக்கடன்:

பால் , தயிர்,பஞ்சாமிர்தம், அரிசி மாவு,தேன்,பன்னீர், இளநீர் , சந்தனம்,விபூதி, மாப்பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் சுவாமிக்கு செய்யலாம். மேலும் சுவாமிக்கு 9 கஜ(35 மீட்டர் நீளம்) வேட்டி படைத்தல், அம்பாளுக்கு 9 கஜ சேலை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமிக்கு பெரிய அளவிலான அலங்கார மாலைகள் சாத்துகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

4 Responses to பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்

  1. //இங்கிருந்து 7 கி.மீ.தூரத்திற்கு கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம்//

    தஞ்சைக்கும் குடந்தைக்கும் குறைந்தது 50 கி.மீ. தூரமாவது இருக்கும். சாரப்பள்ளம் குடந்தைக்கு அருகில் உள்ள ஊரென்றால் 7 கி.மீ.ல் இருக்க சாத்தியமே இல்லை. சாரப்பள்ளம் மாரியம்மன் கோவில், எனப்படும் புன்னை நல்லூருக்கு அருகில் இருக்கிறது. நீங்கள் சொன்ன ஏழு கிலோ மீட்டரில் இருக்கும் ஊர் அது தான். ஏன் இப்படித் தவறான தகவல்களைக் கொடுக்கிறீங்க. தவறான தகவல்களைக் கொடுக்காதீங்க. கூகுளை மட்டுமே நம்பிப் பதிவு எழுதினால் இப்படித் தான் ஆகும். இதுக்கு நீங்க எழுதாமலே இருந்திடலாம்.

    //9 கஜ (35 மீட்டர் நீளம்)// இந்தக் கணக்கும் தப்பு. ஒரு கஜம் என்பது ஒரு மீட்டரை விடவும் குறைவான அளவு. பிறகு எப்படி 9 கஜம் 35 மீட்டராயிற்று?

  2. அன்பு தஞ்சாவூரான்,
    தவறைச் சுட்டியமைக்கு நன்றி. “கும்பகோனம் அருகிலுள்ள” என்னும் சொற்றொடர் அவ்விடத்தில் தேவையற்ற ஒன்றுதான்.
    கூகுளை நம்பித்தான் பதிவு எழுதவேண்டுமா என்ன? பரவாயில்லை. நான் எழுதினால் என்ன? எழுதாவிட்டால் என்ன?

    நான் எழுதியுள்ளது: “அம்பாளுக்கு 9 கஜ சேலை சாத்துதல்” – இது அம்பாளுக்கு.
    35மீட்டர் ஆடை மூலவர் – இலிங்கத்துக்கு. சரிதானே?

  3. எந்த ஊராக இருந்தாலும் அங்கு இருக்கும் சிவ மூர்த்தங்களை என் தந்தையாகவே கருதுகிறவன். அதனால் இந்தத் தகவற் பிழைகள் கொஞ்சம் சினமேற்படுத்திவிட்டன. அது போகக் கொஞ்சம் அத்து மீறியிருக்கிறேன் என்று தான் எண்ணத் தோண்றுகிறது. மன்னிக்கவும். நாவடக்கம் தவறியமைக்கு.

  4. //அதனால் இந்தத் தகவற் பிழைகள் கொஞ்சம் சினமேற்படுத்திவிட்டன.//
    “தகவற் பிழை” தடுமாற்றத்தில் விழுவது உண்டு.

    //கொஞ்சம் அத்து மீறியிருக்கிறேன் என்று தான் எண்ணத் தோண்றுகிறது. மன்னிக்கவும். நாவடக்கம் தவறியமைக்கு.//
    உணர்ந்தாலே போதும். மன்னிப்பெதற்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *