பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம்

அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்.

+91 97513 41108

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் பிரகதீஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் பின்னை, வன்னி
தீர்த்தம் சிம்மக்கிணறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் அரியலூர்
மாநிலம் தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். தன் தந்தையைப்போல மிகச்சிறப்புடன் ஆண்டவன் முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012 – 1044) கங்கைகொண்டான், பண்டிதசோழன் முதலிய பட்டப் பெயர்களையுடையவன். இவனுடைய மகள் அம்மங்காதேவி. லட்சத்தீவையும் வென்ற சிறப்புடையவன். சோழர் தலைநகரான தஞ்சை, பாண்டிய நாட்டு எல்லைக்கு அருகில் இருந்தமையால் அடிக்கடி போர் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. தவிர, காலந்தவறாது பெய்த மழையால் கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கேற்பட்டு, அதனால் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானைக் காணவிரும்பி போதெல்லாம் தடையும் உண்டாவதைக் கண்ட முதலாம் இராசேந்திர சோழன், சோழநாட்டின் மையப்பகுதியில் புதிய தலைநகரம் ஒன்றை அமைப்பதற்கு எண்ணி; முயன்றான். இடத்தைத் தேர்வு செய்து புதிய நகரத்தை நிர்மாணித்து அதை கங்கை நீரால் புனிதப்படுத்த எண்ணித் தன்படையை கங்கைநீர் கொண்டுவர வடநாட்டிற்கு அனுப்பிவைத்தான். அப்படையும் சென்று, வடநாட்டு மன்னர்களை வென்று கங்கை நீர் கொண்டு திரும்பியது. இதனால் முதலாம் இராசேந்திர சோழனுக்குக் கங்கை கொண்டான் கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் உண்டாயிற்று. அந்நீரால் புனிதப்படுத்தி அவ்வூரில் தன்தந்தை, தஞ்சையிற் கட்டியது போலவே ஒரு பெரிய கோயிலைக் கட்டினான். அதுவே கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகும். அவ்விடமே கங்கை கொண்ட சோழபுரம். முதலாம் இராசேந்திரன் முதல் மூன்றாம் இராசேந்திர சோழன் காலம் வரை இவ்வூர் சோழர் தலைநகராகத் திகழ்ந்தது.

இவ்வூரை நிறுவ சுண்ணாம்பினைத் தயாரித்த இடம் சுண்ணாம்புக்குழி என்றும், கோட்டை இருந்த பகுதி உட்கோட்டை (உக்கோட்டை) என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் வழங்குகின்றது. இவ்வூருக்காக கட்டுவித்த ஏரி சோழகங்கம் எனப்பட்டது.

முதலாம் இராசராசன் காலத்திலிருந்து சோழர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த பாண்டியர் கி.பி.12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எதிர்தெழாயினர். அப்போது சோழமன்னர் பலமுறை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து மதுரையை அழித்தனர். இதனால் மனங்குமுறிய பாண்டியர், சோழர்களைப் பழிவாங்கக் காத்திருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பின்பு, பாண்டியர் சோழ நாட்டின் மீது படையெடுத்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாயினர். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை வென்று தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். அக்காலத்தேதான் கங்கைகொண்ட சோழபுரம் பெருத்த அழிவிற்கு ஆளாயிருத்தல் வேண்டும். மாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன. சோழர்குலம் கி.பி. 1279ல் முடிவுறவே அரண்மனைகள் உட்பட நகரில் இடிந்த கட்டிடங்களின் செங்கற்களை ஊர்மக்கள் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

மேலும் சென்ற நூற்றாண்டில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது. அதாவது, லோயர் அணைக்கட்டில் கொள்ளிடத்திற்குப் பாலம் கட்டியபொழுது அரசாங்க அதிகாரிகள் கருங்கல்லால் பாலம் கட்டினால் வலுவாக அமையுமெனக் கருதி, அருகே கருங்கல் கிடைக்காத நிலையில், கங்கைகொண்ட சோழபுரக்கோயிலில் இடிந்து கிடந்த கற்களை எடுத்துச் சென்றதுடன் குறையாக நின்ற மலையும் இடித்துக் கற்களை எடுத்தனர். ஊர் மக்கள் அதனை எதிர்த்ததும், வேறு செங்கல் மதிலைக் கட்டித் தருவதாக அதிகாரிகள் வாக்களித்தனர். ஆனால் பிறகு எதுவும் நிகழவில்லை.

கோயிலில் இருந்து அகற்றப்பட்ட கருங்கற்களில் பல கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவையாவும் இவ்வாறு அழிந்துவிட்டன. கோயிலில் எஞ்சி உள்ள கல்வெட்டுக்கள் சிலவே. அவற்றிலும் சில மிகவும் சிதைந்துள்ளன. கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டுக்கள் தற்பொழுது காணமுடிவதில்லை. இக்கோயிலில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் சிறப்பானது வீரராசேந்திர சோழனது கல்வெட்டாகும். இதிலிருந்து, இக்கோயிலுக்கு விடப்பட்டிருந்த ஊர்களிலிருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கலம் நெல் இக்கோயிலுக்கு அளக்கப்பட்டது என்ற செய்தி தெரிகிறது.

கும்பாபிசேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

இங்குள்ள சிங்கமுகக்கேணியின் மீதுள்ள கல்வெட்டு அதை உடையார்பாளையம் ஜமீன்தான் கட்டியதாகக் கூறுகிறது. ஆனால் அக்கேணி முதலாம் இராசேந்திரன் காலத்திலேயே கட்டப்பட்டு சென்ற நூற்றாண்டில் ஜமீன்தாரால் திருப்பணி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சோழப் பேரரசை வென்ற சடையவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனும், சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்தான் எனினும் கோயிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்க வில்லையென்றும்; மாறாகத் தன் பெயரால் பெருமானுக்குப் பூசை நடத்த நிவந்தம் வைத்தான் என்பதும் தெரிகின்றது.

இத்தலம் திருவிசைப்பாத் தலம் ஆகும்.

இத்தலத்திற்கு ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.

160 அடி உயரமுள்ள ஓங்கிய எண்தள விமானம் (கோபுரம்); பல கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தாலும் காட்சியளிக்கிறது.

இவ்வூர் பண்டை நாளில் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது.

இத்தலம் தற்பொழுது சிற்றூராக உள்ளது. (இங்குப் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் ஏதுமில்லை.) பிற்காலச் சோழர்களுக்குத் தலைநகராக விளங்கிய இத்தலைநகரின் பகுதிகளே, இன்றுள்ள 1. உட்கோட்டை, 2. மாளிகைமேடு, 3. ஆயிரக்கலம், 4. வாணதரையன் குப்பம், 5. கொல்லாபுரம், 6. வீரசோழ நல்லூர், 7. மெய்க்காவல்புத்தூர், 8. சுண்ணாம்புக்குழி, 9. குருகைபாலப்பன் கோயில் முதலிய சிற்றூர்கள் ஆகும்.

சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே மாளிகைமேடுஆகும்.

சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள்.

கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது. விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியனவும் பாடப்பட்டன.

சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்தபதி. இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் மூலம், ஊர்ப் பெயர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணை கொண்ட சோழவள நாட்டு கங்கை கொண்ட சோழபுரம் என்றும்; இறைவன் பெயர் திருப்புலீஸ்வரமுடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும் சிவபெருமானுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக்காணி என்றும், திருமாலுக்கு அளிக்கப்பட்டது திருவிடையாட்டம் என்றும் பெயர் வழங்கப் பெற்றன என்ற செய்தியும்; மன்னனார் என்பது திருமாலுக்குப் பெயர். அவர் எழுந்தருளிய காரணத்தால் அப்பதி மன்னனாகுடி என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்து மன்னார்குடி என்றாயிற்று. அதன் பழம்பெயர் வீரநாராயண நல்லூர் என்பதே என்பன போன்ற பல செய்திகள் இக்கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகின்றன.

இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள இலிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய இலிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய இலிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள இலிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள இலிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.

இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது. இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. கருவறையில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் இலிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்பிகள்.

கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்தக் கல் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்கள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள். இந்த வகைக் கல் வேறு எந்தக் கோயிலிலும் இருப்பதாக தெரியவில்லை.

காஞ்சிமடத்தின் சார்பில், ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மூடை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான இலிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூசை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.

அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில், தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.

பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். இவளது பாதத்தில் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார். அதன் பிறகு தான் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சுற்றமுடியாத நவக்கிரக மண்டபம்
இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாத படி மண்டப அமைப்பு உள்ளது.

இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை மங்கள சண்டிஎன்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது.


ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து பெரிய கோயில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது?” என கேட்டான்.
அமைச்சருக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். “காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசுஎன நினைவு வந்தது. எனவே கணக்கு விநாயகர்என்று அழைக்கப்பட்டார். தற்போது கனக விநாயகர்எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.

இங்குள்ள கோபுரம் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூரைப்போலவே இங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள தஞ்சாவூர் கோபுரம் கீழிருந்து மேல் ஒரே சீராக கட்டப்பட்டிருக்கும். ஆனால் 180 அடி உயரம், 100 அடி அகலமுள்ள இக்கோயில் கோபுரம், கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.

கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயில் விமானம் தான் தமிழகத்தில் பெரிய விமானம் ஆகும்.

இங்கு சரஸ்வதி, இலக்குமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் ஞான சரஸ்வதி“, “ஞான லட்சுமிஎன அழைக்கப்படுகின்றனர்.

பங்குனித்திருவிழாவின் கடைசி நாளில் துர்க்கைக்கு 500 குடம் பாலபிஷேகம் செய்யப்படுகிறது.

திருவிழா:

மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை.

திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக துர்க்கையிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை செய்து பிரார்த்திக்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரகதீஸ்வரருக்கு 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டியும், 14 அடி உயர மாலையும், அம்மனுக்கு 9 கஜ புடவையும் சாத்தி வழிபடலாம்.

வழிகாட்டி:

கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் ரோட்டில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது.

8 Responses to பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம்

  1. Ashokkumar says:

    அருமையான மற்றும் அவசியமான பதிவு.

  2. நன்றி அசோக்குமார்

  3. ranganathan says:

    NALLA THAGAVAL THANKS

  4. மதன் பாரத் says:

    உங்களின் சீரிய முயற்சிக்கு எமது பாரட்டுக்கள்

  5. மிக்க நன்றி மதன்.

  6. kamaraj v.a.o says:

    very nice

  7. kamaraj gaingaikondacholapuram v.a.o says:

    nala thagavalgal thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *