Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் உதித்த மகாபுருஷர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.

தன்வந்திரி இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். தன்வந்திரியை முதல் மருத்துவர் என்று நம்புகின்றார்கள் இந்துக்கள். விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தனி சந்நிதியில் தன்வந்திரி காணப்படுகிறார்.

அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், ஒத்தக்கடை

அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம்

+91-98420-24866 (மாற்றங்களுக்குட்பட்டது)

பகவான் நாராயணன் இரணிய வதத்திற்காக மனிதனும் சிங்கமும் கலந்த விநோத உருவம் கொண்ட நரசிம்ம மூர்த்தியாக(தற்போது ஆந்திர மாநிலம் அகோபிலம் திருத்தலத்தில்) அவதாரம் எடுத்தார். அவரே, யோக நரசிம்மராக, ரோமச முனிவர் என்ற பக்தரின் பிரார்த்தனைக்கு மனமிரங்கி யானைமலையில் அவதாரம் செய்கிறார்.

இந்த யோக நரசிம்மர் மதுரைக்கு அருகே ஒத்தக்கடையில் 5 கி.மீ. நீளமுள்ள யானைமலை அடிவாரத்தில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார்.

தேவலோகத் தலைவனான இந்திரனே யானை வடிவில் மலையாக படுத்திருப்பதாகப் புராணம் கூறுகிறது. இங்குள்ள நரசிம்மரைப்போல் வேறு எங்குமே தரிசிக்க முடியாது. ஆறடி உயர கர்ப்பக்கிரகத்தில் முழுவதுமாக நிரம்பி அமர்ந்த கோலத்தில், வலது கையில் சக்கரத்துடன் பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறார்.