Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில், பொன்பதர்கூடம்

அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்,பி.வி.களத்தூர் வழி,பொன்பதர்கூடம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2744 1227, 97890 49704 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே கோயில் அர்ச்சகரை தொடர்பு கொண்டால், பிற நேரத்தில் சுவாமியைத் தரிசிக்கலாம்.

மூலவர்

சதுர்புஜ கோதண்டராமர்

தீர்த்தம்

தேவராஜ புஷ்கரணி, சேஷ தீர்த்தம்

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பொன்பதர்க்கூடம்

ஊர்

பொன்பதர்க்கூடம்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

இராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, தனது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதையின் மீது பரிவு காட்டிய திரிஜடை மற்றும் இராவணன் மனைவி மண்டோதரி ஆகியோருக்கு நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணுவாகக் காட்சி தந்தார். இதேபோல தனக்கும் காட்சி கிடைக்க வேண்டுமென, தேவராஜ மகரிஷி விரும்பினார். இதற்காக இத்தலத்தில் சுவாமியை வேண்டித் தவமிருந்தார். அவரது பக்திக்கு இரங்கிய மகாவிஷ்ணு, நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி இங்கு காட்சி தந்தார். மேலும், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி சதுர்புஜ கோதண்டராமர்என்று பெயர் பெற்றார்.

மூலஸ்தானத்தில் இராமபிரான், வலது புறம் சீதையுடன் அமர்ந்து, திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் இலட்சுமணர் நின்றிருக்கிறார். இவர்கள் மூவரையும் வணங்கியபடி, வலது திருவடியை முன்புறமாக வைத்தநிலையில் ஆஞ்சநேயர் இருக்கிறார். இராமபிரான், மகாவிஷ்ணு போல காட்சி தந்த தலமென்பதால், இவரது மார்பில் மகாலட்சுமி இருப்பது சிறப்பான அமைப்பு. மகர சங்கராந்தியன்று (தைப்பொங்கல்) சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். அன்று சுவாமி பாரிவேட்டைக்குச் செல்வார். இராமபிரான், சூரிய குலத்தில் தோன்றியவர் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில்

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2746 4325, 2746 4441 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாடலாத்ரி நரசிம்மர்

உற்சவர்

பிரகலாதவரதர்

தாயார்

அஹோபிலவல்லி

தல விருட்சம்

பாரிஜாதம்

தீர்த்தம்

சுத்த புஷ்கரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

சிங்கப்பெருமாள் கோயில்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. மூலவர் பாடலாத்ரி நரசிம்மர். சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கையை அபயகரமாகவும், இடது கை தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளார். மூன்று கண்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவர் பிரகலாதவரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்கின்றனர். மூலவர் குகைக்கோயிலில் அருள்பாலிப்பதால் அவரை வலம் வர வேண்டுமென்றால் சிறிய குன்றினையும் சேர்த்து வலம் வர வேண்டும்.

பாடலம்என்றால் சிவப்பு.” “அத்ரிஎன்றால் மலை.” நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்தால் பாடலாத்ரிஎன இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது. இது பல்லவர் கால குடைவரைக் கோயிலாகும். தாயார், ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், இலட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்.