அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில், பொன்பதர்கூடம்

அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்,பி.வி.களத்தூர் வழி,பொன்பதர்கூடம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2744 1227, 97890 49704 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே கோயில் அர்ச்சகரை தொடர்பு கொண்டால், பிற நேரத்தில் சுவாமியைத் தரிசிக்கலாம்.

மூலவர்

சதுர்புஜ கோதண்டராமர்

தீர்த்தம்

தேவராஜ புஷ்கரணி, சேஷ தீர்த்தம்

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பொன்பதர்க்கூடம்

ஊர்

பொன்பதர்க்கூடம்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

இராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, தனது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதையின் மீது பரிவு காட்டிய திரிஜடை மற்றும் இராவணன் மனைவி மண்டோதரி ஆகியோருக்கு நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணுவாகக் காட்சி தந்தார். இதேபோல தனக்கும் காட்சி கிடைக்க வேண்டுமென, தேவராஜ மகரிஷி விரும்பினார். இதற்காக இத்தலத்தில் சுவாமியை வேண்டித் தவமிருந்தார். அவரது பக்திக்கு இரங்கிய மகாவிஷ்ணு, நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி இங்கு காட்சி தந்தார். மேலும், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி சதுர்புஜ கோதண்டராமர்என்று பெயர் பெற்றார்.

மூலஸ்தானத்தில் இராமபிரான், வலது புறம் சீதையுடன் அமர்ந்து, திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் இலட்சுமணர் நின்றிருக்கிறார். இவர்கள் மூவரையும் வணங்கியபடி, வலது திருவடியை முன்புறமாக வைத்தநிலையில் ஆஞ்சநேயர் இருக்கிறார். இராமபிரான், மகாவிஷ்ணு போல காட்சி தந்த தலமென்பதால், இவரது மார்பில் மகாலட்சுமி இருப்பது சிறப்பான அமைப்பு. மகர சங்கராந்தியன்று (தைப்பொங்கல்) சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். அன்று சுவாமி பாரிவேட்டைக்குச் செல்வார். இராமபிரான், சூரிய குலத்தில் தோன்றியவர் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.

இங்குள்ள உற்சவமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரது சிலை விரல் நகம் மற்றும் கை ரேகைகளும் தெரியும்படியாக வடிக்கப்பட்டுள்ளது. இவர் இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். சீதையைத் திருமணம் செய்யும் முன்பு இராமர், இடது கால் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்துக்கொண்டு, ஒடித்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இந்த அமைப்பில் சிலை வடித்துள்ளனர். இத்தகைய கோலத்தில் இராமரை தரிசிப்பது அபூர்வம்.

தர்மதிஷ்டர் என்னும் மகானுக்கு ஒரு சாபத்தால் சயரோகம் ஏற்பட்டது. நிவர்த்தி வேண்டி இத்தலத்தில் ராமபிரானை வழிபட்டார். சுவாமி, அவரது நோயைப் போக்கியருளினார். இந்நிகழ்வின் அடிப்படையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சுவாமிக்குத் துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

இங்கு இறைவன் புஷ்பக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இலட்சுமி நாராயணர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர், தேசிகர் ஆகியோர் முன்மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

இராமநவமி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம்.

கோரிக்கைகள்:

தம்பதியர் தங்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கவும், பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

இத்தலத்தில் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்கிறார்கள். துலாபாரமாகவும் காணிக்கை செலுத்துவதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *