Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், பார்த்திபனூர்

அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், இராமேஸ்வரம் ரோடு, பார்த்திபனூர், இராமநாதபுரம் மாவட்டம்.

+91- 94420 47977, +91- 99767 11487

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

மூலவர்

சங்கரனார் (சொக்கநாதர்)

தாயார்

மீனாட்சி

தல விருட்சம்

மாவலிங்க மரம்

தீர்த்தம்

சங்கரன் குளம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

நல்லூர்

ஊர்

பார்த்திபனூர்

மாவட்டம்

இராமநாதபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

மகாபாரதப் போரின்போது பாண்டவ, கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வியாசர் அர்ஜுனனிடம், சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் சிவனை வேண்டித் தவமிருந்தான். அவனது தவத்தை கலைக்க முகாசுரனை அனுப்பினார் துரியோதனர். பன்றி வடிவில் வந்த அசுரனை, அர்ஜுனன் அம்பால் வீழ்த்தினான். அப்போது சிவன், வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்றார். அர்ஜுனன் மறுத்தான். சிவன் தானே அதை வேட்டையாடியதாகச் சொல்லி சண்டைக்கு இழுத்தார். அவருடன் போரிட்ட அர்ஜுனன், அம்பு எய்தான். அது சிவனின் தலையைப் பதம் பார்த்தது. இரத்தம் வழிய நின்ற சிவன், அவனுக்கு சுயரூபம் காட்டினார். வருந்திய அர்ஜுனன், மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். அதன்பின், அவன் பல இடங்களில் சிவ வழிபாடு செய்தான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, இங்கு சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டு வழிபட்டான். பிற்காலத்தில் பக்தர் ஒருவரிடம் அசரீரியாக சிவன், இங்கு இலிங்கமாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தியபின், இக்கோயில் எழுப்பப்பட்டது.

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர்

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர், ஆவுடையார் கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்.

+91 4371-239 212, 99652 11768, 97861 57348

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சகஸ்ரலட்சுமீஸ்வரர்

தாயார்

பிரகன்நாயகி, பெரியநாயகி

தல விருட்சம்

வேம்பு

தீர்த்தம்

தாமரைக்குளம்

ஆகமம்

காமிகம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

தீ அயனூர்

ஊர்

தீயத்தூர்

மாவட்டம்

புதுக்கோட்டை

மாநிலம்

தமிழ்நாடு

திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு இலிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக நினைத்து, அதை எடுக்க முயன்றபோது, சிவன் அவர் முன் தோன்றித் தடுத்தார். இதையறிந்த இலட்சுமிக்கும், சிவதரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின் ஆலோசனையின்படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனைப் பூஜை செய்தாள். இவளது பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதனால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால் ஆயிரம்.

அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரைத் தரிசிக்க மாதம் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம். எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது.