Monthly Archives: November 2011

வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி போஸ்ட், கடலூர் மாவட்டம்.

+91-98419 62089

காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டானம், சம்கார மூர்த்தி
அம்மன் பெரியநாயகி, திரிபுர சுந்தரி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் சூலத்தீர்த்தம், கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், குளம், கெடில நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம்
ஊர் திருவதிகை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர் , ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து, “தங்களை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாதுஎன்று பிரம்மாவிடம் வரம் பெற்றனர். அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன்(அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து, அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால்தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.

தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால்தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க, சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார். அவ்வளவுதான். உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். ஈசன், ஒரே சமயத்தில் தேவர்கள், அசுரர்கள் இருவரது ஆணவத்தையும் அடக்கினார். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார். மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.

மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்) திருக்கோயில், திருச்சோபுரம்

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்) திருக்கோயில், திருச்சோபுரம், தியாகவல்லி, கடலூர் மாவட்டம்.

+91-94425 85845

காலை 8.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர்
உற்சவர் சோபுரநாதர்
அம்மன் தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் வங்கக் கடல், கிணற்று தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சோபுரம், தியாகவல்லி
ஊர் திருச்சோபுரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

கயிலாயத்தில் சிவன், அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த, தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி, கடல் மணலால் இலிங்கம் அமைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் இலிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை. சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர், அருகிலிருந்த மூலிகைச் செடிகளை பறித்து, அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் இலிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த இலிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் இலிங்கமாகக் காட்சி தருகிறார். இலிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். இலிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. மஞ்சளும், குங்குமமும் அம்பாள் வழிபாட்டிற்கு உரியது. ஆனால், திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.