Monthly Archives: November 2011

மன்னீஸ்வரர் திருக்கோயில், அன்னூர்

அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில், அன்னூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4254 – 262 450, 98422 – 38564

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மன்னீஸ்வரர் (அன்னீஸ்வரர்)
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் அருந்தவச்செல்வி
தல விருட்சம் வன்னி
ஆகமம் காரணாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மன்னியூர்
ஊர் அன்னூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி வள்ளிச்செடிகள் நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற சிவபக்தன், இங்கு வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த வேலையும் தெரியாது என்பதால், வேட்டையாடி வந்தான். ஒருநாள் விலங்குகள் எதுவும் சிக்கவில்லை. பசியின் காரணமாக, வள்ளிக்கிழங்கை கோடரியால் வெட்டி சாப்பிட்டான். கிழங்கை வெட்டிய பிறகும், அது அளவில் குறையாமல் அப்படியே இருந்தது. ஆச்சரியத்துடன், மேலும் கிழங்கை வெட்டவெட்ட கிழங்கின் நீளம் குறையவே இல்லை. கிழங்கின் முழு நீளத்தையும் அறிந்துகொள்ள, கூடுதல் ஆழத்திற்கு வெட்டினான். அப்போது கிழங்கில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த வேடனிடம் அசரீரியாக ஒலித்த குரல்,”இனி உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை செய்யாமல் இரு. இதுவரையில் நீ செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டதுஎன்றது. வேடன் மன்னனிடம் சென்று நடந்த சம்பவங்களைத் தெரிவித்தான். இங்கு வந்த மன்னன் ரத்தம் வெளிப்பட்ட இடத்தில் தோண்டியபோது, மண்ணிற்கு அடியில் ஒரு இலிங்கத்தைக் கண்டான். இலிங்கத்தை வெளியில் எடுக்க முயற்சி செய்தான். முடியவில்லை. எனவே, இலிங்கத்தின் மீது சங்கிலியைக் கட்டி, யானையைக் கொண்டு இழுத்துப் பார்த்தான். ஆனால், இலிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன்,”தான் இவ்விடத்திலேயே குடியிருக்க விரும்புவதாகவும், அதனால் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டாம்எனவும் கூறினார். எனவே, மன்னன் இலிங்கம் இருந்த இடத்திலேயே கோயில் கட்டி வழிபட்டான்.

மாணிக்கவாசகர் திருக்கோயில் , சின்னமனூர்

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் , சின்னமனூர், தேனி மாவட்டம்.

காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாணிக்கவாசகர்
ஊர் சின்னமனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் வசித்த சம்புபாதசிரியர், சிவஞானவதி தம்பதியரின் மகன் வாதவூரார். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக்கி, “தென்னவன் பிரமராயன்என்று பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து, தனது படைக்கு குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.
அவர் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) தலத்தை அடைந்தபோது, ஒரு குருந்த மரத்தின் அடியில் சிவபெருமான், குருவாக இருந்து சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக்கண்ட வாதவூரார் தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, திருவடியில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.


சிவனும் அவருக்கு உபதேசம் செய்தார். மகிழ்ந்த மாணிக்கவாசகர் அவரைப் பற்றிப் பாடினார். அந்த பதிகங்களின் வாசகங்கள் மாணிக்கம் போல இருந்ததால் சிவன் அவருக்கு மாணிக்கவாசகர்என பெயர் சூட்டினார். தன்னை சிவனிடமே ஒப்படைத்த மாணிக்கவாசகர், மன்னன் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். அவருக்காக, சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும் அவை நரிகளாக மாறவே, மன்னன் மாணிக்கவாசகரைத் தண்டித்தான். சிவன், அவரை விடுவிக்க திருவிளையாடல் செய்து, தனது பக்தனின் பெருமையை ஊரறியச் செய்தார். இப்படி புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இங்கு மூலவராக அருளுகிறார். தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப் படுகிறது. விழாக்களின்போது இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழிமாத உத்திர நட்சத்திரத்தில் மாணிக்கவாசகர், நடராஜர் இருவரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். குருபூஜையன்று தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளவர்கள், இங்கு திருவாசகத்தின் திருச்சாழல்பதிகத்தை பாடி வேண்டுகின்றனர். குருபூஜையின்போது, உச்சிக்காலத்தில் மகேஸ்வர பூஜைஎன்னும், சிவனடியார் பூஜை நடக்கும். சிவனடியார்களை சிவனாக பாவித்து திருநீறு, சந்தனம் பூசி மலர் தூவி தீபாராதனை செய்து விருந்து படைக்கின்றனர்.


சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவர் சிவலிங்கத்தை வணங்கி நின்றபடி இருக்கிறார். சிவன் சன்னதி முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியான கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். கோரை பற்களுடன் கூடிய மற்றொரு சனீஸ்வரரை, “கோரசனீஸ்வரர்என்கின்றனர். மாணிக்கவாசகர் நின்றகோலத்தில் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார். ருத்ராட்ச மாலை அணிந்து, வலது கையில் ஜெபமாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏடுடன் இருக்கிறார். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி இருவரும் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருமலையராயப்பெருமாள் திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.

திருவிழா : ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
பிரார்த்தனை : அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கவும், திக்குவாய் குறை உள்ளவர்கள் சரியாகவும் இங்கு பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.