Monthly Archives: November 2011

அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர்

அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர், திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711, 99651 44849

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அதுல்யநாதேஸ்வரர்
அம்மன் அழகிய பொன்னழகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தென்பெண்ணை
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அறையணிநல்லூர், திருவறையணிநல்லூர்
ஊர் அறகண்டநல்லூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், திருநாவுக்கரசர்

மகாபலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மகாவிஷ்ணு, உயிரைக் கொன்ற தோஷம் நீங்க, சிவனை வேண்டினார். அவர் பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி பல தலங்களுக்கும் சென்ற மகாவிஷ்ணு, இத்தலத்தில் சிவனை வழிபட்டபோது, சிவன் அவருக்கு காட்சி தந்து விமோசனம் தந்தார். மகாவிஷ்ணு தாயாரைப் பிரிந்து தனியே வந்ததால், ஸ்ரீதேவியும் மகாவிஷ்ணுவைத் தேடி இத்தலத்திற்கு வந்தாள். இவ்விருவருக்கும் சிவன் காட்சி தந்தருளினார்.

பிற்காலத்தில் நீலகண்டர் எனும் முனிவர் ஒருவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி சிவதல யாத்திரை சென்றார். அவர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி, சிறு குன்றாக இருந்த இத்தலத்தில் அமர்ந்தார். அப்போது தூரத்தில் இருந்த திருவண்ணாமலையை தரிசித்த முனிவருக்கு, இந்த தலத்திலேயே சிவனை வழிபட வேண்டும் என ஆசை வந்தது. எனவே, சிவனை எண்ணி இவ்விடத்தில் தவம் செய்து வழிபட்டார். அவருக்காக மனம் இரங்கிய சிவன், அம்பாளுடன் காட்சி தந்து அவருக்கு சாபவிமோசனம் கொடுத்தருளினார். நீலகண்ட முனிவர் சிவனிடம், தனக்கு இவ்விடத்தில் அருளியது போல இங்கிருந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டுமென வேண்டினார். அவருக்காக சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அறையணிநாதர்என்ற பெயர் பெற்றார்.

அறைஎன்றால் பாறைஎன்றும், “அணிஎன்றால் அழகுஎன்றும் பொருள். பாறை மீது அழகாக அமைந்திருப்பவர் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்தது.

இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி உருத்ராட்சப் பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து, சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடிக் கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.

வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டேசுவரர்
உற்சவர் அந்தகாசுர வதமூர்த்தி
அம்மன் பெரியநாயகி, சிவானந்த வல்லி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் தென்பெண்ணை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அந்தகபுரம், திருக்கோவலூர்
ஊர் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர்

பார்வதி ஈசனின் இரு(சூரியன், சந்திரன்) கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து, அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள்(அஞ்ஞானம்). அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து இரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி, போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி ரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் இரத்தத்துளிகளை, கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள். வெளிப்பட்ட இரத்தம், இரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில், சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருக்க செய்கிறார். பின்னர், அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார்.

இதையே, இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களில் வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோச நிவர்த்தி ஆகும். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார்.

அவ்வையார், கபிலர் இருவரும் சேர்ந்து, பாரி வள்ளலின் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும், திருக்கோயிலூரை ஆண்ட தெய்வீக மன்னனுக்கு திருமணம் செய்து வைத்த சிறப்புடைய தலம் இது. இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறை கபிலர் குன்று என்று பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது.