Monthly Archives: November 2011

வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்

அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர், கடலூர் மாவட்டம்.

+91- 4144-208 704.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நர்த்தன வல்லபேஸ்வரர்
அம்மன் ஞானசக்தி, பராசக்தி
தல விருட்சம் கல்லால மரம்
தீர்த்தம் பரம்ம, அகஸ்திய, கார்த்தியாயனர் தீர்த்தங்கள்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தட்சிணப்பரயாகை
ஊர் திருக்கூடலையாற்றூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

சோழநாட்டை ஆண்டு வந்த தினகர மகாராஜன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளைக் கொன்று விட்டான். இதனால் அவனுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து கொண்டது. இதனால் மனைவி, மக்களை இழந்து சுற்றித்திரிந்தான். அப்போது ஒரு சொரிநாய் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தது. ஒருநாள் அந்த நாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும், தோற்றப்பொலிவுடனும் விளங்கியது. இதைப்பார்த்த மன்னன் தானும் அந்நதியில் நீராடி தனது தோஷம் நீங்கப்பெற்று, நாடு நகரத்தை திரும்பப் பெற்றான். அவன் நீராடிய இடத்தில் இரண்டு நதிகள் கூடின. அந்த நதிகளின் கரையில் சிவாலயம் கட்டினான். நதிகள் கூடியதால், “திருக்கூடலையாற்றூர்என்று பெயரும் வைத்தான். மன்னன் கட்டிய கோயில் பழுதடைந்தது. சிலைகளைக் காணவில்லை. அப்போது அம்மன், அவ்வூர் பொன்னப்ப குருக்களின் கனவில் தோன்றி நான் ஆற்றில் கிடக்கிறேன் என்றாள். அதன்பின் குருக்கள் ஆற்றில் கிடந்த சிலைகளை எடுத்து தற்போதுள்ள கோயிலை கட்டி, சிலைகளை பிரதிஷ்டை செய்தார்.

பிரளயகாலேஸ்வரர் கோயில், பெண்ணாடம்

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம்.

+91- 4143-222 788, 98425 64768

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 9 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரளயகாலேஸ்வரர் (சுடர்க்கொழுந்துநாதர்)
அம்மன் அழகிய காதலி (ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி)
தல விருட்சம் செண்பகம்
தீர்த்தம் கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பெண்ணாகடம்
ஊர் பெண்ணாடம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய, பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. தேவகன்னியர் இருவரை தேவேந்திரன் பூலோகத்திற்கு அனுப்பி, பூக்களை பறித்து வரச் சொன்னான். பூமிக்கு வந்த கன்னியர்கள் ஒரு நந்தவனத்தில் பூக்கள் இருப்பதைக் கண்டு அதை பறிக்கச் செல்கிறார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டதும் பக்தியால் ஈர்க்கப்பட்டு, பறித்த பூக்களை அவருக்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டனர். கன்னியரைக் காணாத இந்திரன் அவர்களை அழைத்து வர காமதேனு பசுவை அனுப்பினார். அது பூலோகம் வந்ததும் கன்னியர் செய்யும் பூஜையைக்கண்டு தானும் அவர்களுடன் சேர்ந்து ஈசனுக்குப் பால் அபஷேகம் செய்து, அங்கேயே தங்கி விட்டது.

மீண்டும், தன் ஐராவத வெள்ளையானையை அனுப்பினான் இந்திரன். யானை, பூமியில் இவர்கள் செய்யும் பூஜையைப் பார்த்து விட்டு தானும் தன் பங்கிற்கு, திறந்தவெளியில் இருந்த சிவலிங்கத்தை மறைத்து நின்று, வெயில் படாமல் பார்த்து கொண்டது. பொறுமை இழந்த இந்திரன் பூமிக்கு வந்துவிட்டான். தன்னால் அனுப்பபட்டவர்கள் அனைவரும் சிவபூஜை செய்வதை பார்த்து, அவனும் பூஜை செய்ய ஆரம்பத்து விட்டான். சிவனருள் பெற்று அனைவருடனும் தேவலோகம் சென்றான்.