Monthly Archives: July 2011

அருள்மிகு மோகன கிருஷ்ணன் கோயில், திருவாய்ப்பாடி

அருள்மிகு மோகன கிருஷ்ணன் கோயில், திருவாய்ப்பாடி, கோகுலம், தில்லி

கிருஷ்ணர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். மதுராவிலுள்ள கிருஷ்ணன் பிறந்தாலும் அவர் வளர்ந்ததெல்லாம் ஆயர்ப்பாடியில் தான் என்பதால் கிருஷ்ணனை முழுமையாக அனுபவித்துப் பார்த்தவர்கள் இங்கு தான் அதிகம். இதற்கு மற்றொரு பெயர் கோகுல் அல்லது கோகுலம் என்று அழைக்கப்படுகிறது.

மதுரா நகரிலிருந்து 4 கி. மீட்டர் தொலைவில் திருவாய்பாபாடி காணப்படுகிறது. யமுனை நதியைக் கடந்து அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சென்றால் திருவாய்ப்பாடி என்ற ஊர் உள்ளது. மூலவர் மோகன கிருஷ்ணன். கிழக்கே திருமுக மண்டலம். தாயார் ருக்மணி, சத்யபாமா பிராட்டியார்கள். தீர்த்தம் யமுனா நதி. விமானம் ஹேமகூட விமானம். நந்தகோபருக்கு கிருஷ்ணர் நேரிடையாகத் தரிசனம் தந்த இடம்.

ஆழ்வார்கள் பாடிய கோவில்களும் உருவச் சிலைகளும் இப்போது இல்லை புராண கோகுல் என்று ஒன்றுண்டு. கோயில் வாசலில் யமுனை நதி ஓடுகிறது. நந்தகோபர், யசோதா பலராமர் விக்ரகங்களுக்கடியில் குழந்தையாக கிருஷ்ணனை ஒரு மரத் தொட்டிலில் வைத்திருக்கிறார்கள். மற்றபடி பஞ்சலோக விக்ரகங்கள் எதுவுமில்லை.

பரிகாரம்:
குழந்தை இல்லாதவர்களும் நோயினால் வறுமையினால் அவதிப்படும் குழந்தைகளைப் பெற்றவர்களும் இந்த திருவாய்ப்பாடி கோயிலுக்கு வந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை சேவித்தால் அவர்களுடைய புத்திர பாக்கியம் வலுப்பெறும். குழந்தைகளும் நோய்நொடி வறுமைப் பிணி இல்லாமல் வாழ்வார்கள்.

அருள்மிகு ரகுநாத் மந்திர், திருக்கண்டங்கடிநகர்

அருள்மிகு ரகுநாத் மந்திர், திருக்கண்டங்கடிநகர், உத்ராஞ்சல்.

தேவப்ரயாக் (திருக்கண்டங் கடிநகர்) பத்ரி நாத் க்ஷேத்ர மாகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவப்ரயாகில் உள்ள ரகுநாத் மந்திர் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. தேவப்ரயாகை கடல் மட்டத்திலிருந்து 1600அடி உயரத்தில், ரிஷிகேஷிலிருந்து 71கி.மீ. தூரத்தில் ரிஷீகேஷ்பத்ரிநாத் பஸ் பாதையில் உள்ளது. பத்ரிநாத் செல்லும் யாத்திரிகர்களுக்கு இமாலய க்ஷேத்ரத்தில் முதலாவது திவ்ய க்ஷேத்ரமாக விளங்குகிறது. பெரியாழ்வாரால் பாடல்பெற்ற இந்த கோயில், தீர்த்தம் இரண்டுமே மகிமை வாய்ந்தவை.

சங்கமத்திலிருந்து 104படிகள் ஏறி ரகுநாத் மந்திரை (கோயிலை) அடைகிறோம். பகவான் ஸ்ரீராமன் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி காலங்களில் இங்கு பெரிய விழா எடுக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு தரிசனம் செய்யலாம். அலக்நந்தா பாகீரதி சங்கமஸ்தானமான தேவப்ரயாகில் இருந்து தான் கங்காநதி என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இது திருக்கண்டம் கடிநகர் (ஸ்ரீகண்ட க்ஷேத்ரம்) என்று கூறப்படுகிறது.

கோயில் ரகுநாத் மந்திர்
மூலவர் புருஷோத்தமன், நீலமேகப் பெருமான், ஸீதாஸமேத ரகுநாத்ஜீ
தாயார் புண்டரீகவல்லி
தீர்த்தம் மங்கள தீர்த்தம், கங்கை நதி
விமானம் மங்கள விமானம்
ஊர் திருக்கண்டம் கடிநகர்(தேவப்ரயாக்)
மாநிலம் உத்ராஞ்சல்

மங்களாசாஸனம் பெரியாழ்வர் – 11பாசுரங்கள்

“வடதிசை மதுரை, சாளக்கிராமம்,

வைகுந்தம், துவாரை, அயோத்தி

இடம் உடைவதரி இடவகை உடைய

எம் புருடோத்தமன் இருக்கை.”

“கங்கையின் கரைமேல் கை தொழநின்ற

கண்டம் என்னும் கடிநகரே”

“பொங்கு ஒலி கங்கைகரை மலி கண்டத்து

உறை புருடோத்தமன்.”(பெரியாழ்வார்)

தேவப்ரயாக் வாசிகள், பெரும்பாலும் ஆறு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆந்திராவிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சொல்லுகிறார்கள்.

பண்டைய காலத்திலிருந்தே நம்நாட்டு மக்கள் பக்தியால் தூண்டப்பட்டு, பாதயாத்திரையாகவே நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கு பகவானை தரிசித்து ஆத்ம சாந்தி அடைந்துள்ளனர்.

தற்காலம் போல, போக்குவரத்து மேலும் இதர வசதிகள் இல்லாத சமயத்தில், பல இன்னல்களை சமாளித்து, புனித யாத்திரை செய்து இங்கு வந்துள்ளனர்.