Category Archives: திருவள்ளூர்

தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம்

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை.

+91- 44- 2228 0424, 93826 77442, 99411 49916

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தேனுபுரீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் தேனுகாம்பாள்
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கபில தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மாடையம்பதி
ஊர் மாடம்பாக்கம்சென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். ஒரு இலிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்களைத் தூவினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க, “மணலில் இலிங்கத்தை வைக்க மனமில்லைஎன்றார். சிவன் அவரிடம், “கையில் இலிங்கத்தை வைத்து பூஜித்த முறை சரியல்லஎனச் சொல்லி அவரைப் பசுவாகப் பிறக்கச் செய்துவிட்டார்.

பசுவாக பிறந்த கபிலர், இங்கு சிவனை வழிபட்டு முக்திபெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, “தேனுபுரீஸ்வரர்எனப்பட்டார். “தேனுஎன்றால் பசு.” இவருக்கு உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்என்றும் பெயர் உண்டு.

கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இலிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. இலிங்கத்தைச் சுற்றி மண்டபம் போன்ற அமைப்பில் காப்பும், நாகாபரணமும் அணிவித்து உள்ளனர். சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்திக்கு மேலுள்ள சுவரில் அஷ்டதிக் பாலகர்கள் வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது விசேஷம். அம்பிகை தேனுகாம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள். முன் மண்டபத்திலுள்ள தூணில் கபிலர், கையில் இலிங்க பூஜை செய்த சிற்பம் இருக்கிறது.

தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி

அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.

+91-44 – 2844 4054

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் தீர்த்தபாலீஸ்வரர்
அம்மன் மகாதிரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் கடல்தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவல்லிக்கேணிசென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கயிலையில் சிவன் திருமணம் நடந்தபோது, உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு சென்றார். வழியில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. வன்னி மரத்தடியில் இளைப்பாறினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. எனவே, இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்தார். அவருக்கு காட்சிதந்த சிவன், வங்கப்பெருங்கடலில் நீராடி அதன் தீர்த்தத்தால் தன்னை அபிஷேகம் செய்து வணங்கிட நோய் தீரும் என்றார். அகத்தியர் கடலில் நீராடி, கமண்டலத்தில் நீர் எடுத்து, சுவாமிக்கு பூஜை செய்து நோய் நீங்கப்பெற்றார். கடல் தீர்த்தத்தால் தன்னை பூஜை செய்யும்படி கூறிய சிவன் என்பதால், இவர் தீர்த்த பாலீஸ்வரர்என்றழைக்கப்படுகிறார். அகத்தியரின் நோயை தீர்த்ததாலும் இப்பெயரில் அழைக்கப்படுவதாக கூறப்படுவதுண்டு.

இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார். அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார் என்பது புராணம். இவருக்கு கடல்தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகிறது.