தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி

அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.

+91-44 – 2844 4054

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் தீர்த்தபாலீஸ்வரர்
அம்மன் மகாதிரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் கடல்தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவல்லிக்கேணிசென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

கயிலையில் சிவன் திருமணம் நடந்தபோது, உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு சென்றார். வழியில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. வன்னி மரத்தடியில் இளைப்பாறினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. எனவே, இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்தார். அவருக்கு காட்சிதந்த சிவன், வங்கப்பெருங்கடலில் நீராடி அதன் தீர்த்தத்தால் தன்னை அபிஷேகம் செய்து வணங்கிட நோய் தீரும் என்றார். அகத்தியர் கடலில் நீராடி, கமண்டலத்தில் நீர் எடுத்து, சுவாமிக்கு பூஜை செய்து நோய் நீங்கப்பெற்றார். கடல் தீர்த்தத்தால் தன்னை பூஜை செய்யும்படி கூறிய சிவன் என்பதால், இவர் தீர்த்த பாலீஸ்வரர்என்றழைக்கப்படுகிறார். அகத்தியரின் நோயை தீர்த்ததாலும் இப்பெயரில் அழைக்கப்படுவதாக கூறப்படுவதுண்டு.

இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார். அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார் என்பது புராணம். இவருக்கு கடல்தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகிறது.

இங்குள்ள பிரகாரத்தில் சிதம்பர விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார். இவரைச் சுற்றிலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் வகுப்பை எழுதி வைத்துள்ளனர். இவரை பாஸாக்கும் கணபதிஎன்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். மகாமண்டபத்தில் இலட்சுமியை மடியில் தாங்கியபடி நாராயணன், சூரியன் ஆகியோர் சுவாமியை நோக்கியபடி உள்ளனர். விநாயகருக்கு எதிரே வன்னி மரமும் இருக்கிறது. ஞானம் தரும் தட்சிணாமூர்த்தியையும், விநாயகரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்தால் மாணவர்கள் கல்வியில் சிறப்பர் என்பது மற்றொரு நம்பிக்கை. சுற்றுப்பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் உள்ள சிவன் மற்றும் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆண்டுதோறும் மாசிமகத்தன்று தீர்த்தவாரி திருவிழாநடக்கிறது. இத்தினத்தில், சுவாமி கடலுக்கு சென்று நீராடிவிட்டு திரும்புகிறார். சென்னையிலுள்ள சிவாலயங்களில் இவரே, முதலில் கடலில் தீர்த்தநீராட வருகிறார். இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர்; நைவேத்யம் சர்க்கரைப் பொங்கல். இங்குள்ள விமானம் கமல விமானம். இத்தலத்து இறைவனுக்கு, அகத்தீஸ்வரர், சர்வேஸ்வரர், நோய்தீர்த்தபிரான் என இவருக்கு பலபெயர்கள் உள்ளன. மாசிமாதம் மகாசிவராத்திரி தினத்தன்று மட்டும் சூரியன் தனது ஒளியை சுவாமியின் மீது பரப்பி பூஜைசெய்வது சிறப்பு.

திருவிழா:

மாசியில் தீர்த்தவாரி, மகாசிவராத்திரி, ஆடிப்பூரம்.

கோரிக்கைகள்:

திருமணதோஷம், புத்திர தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கவும், நோய் இல்லாத வாழ்க்கை அமையவும் இத்தலத்தில் வேண்டலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *