Category Archives: திருவள்ளூர்

அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பாசூர்

அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பாசூர், திருவள்ளூர் மாவட்டம்.

+91- 98944 – 86890 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வாசீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் தங்காதலி
தல விருட்சம் மூங்கில்
தீர்த்தம் சோம, மங்கள தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருப்பாசூர்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர்

பல்லாண்டுகளுக்குப் முன்பு, இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு ஒரு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டிப் பார்க்க உத்தரவிட்டான். காவலர்கள் இவ்விடத்தில் வாசி எனும் கருவியால் தோண்டி பார்த்தனர். அப்போது மண்ணிற்கு அடியில் இருந்து இரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்தபோது, சிவன் சுயம்பு லிங்கமாக இருந்தார். பயந்துபோன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். மறுநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக, கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு, அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவில், தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான். வாசி எனும் கருவியால் வெட்டுப்பட்ட சிவன் என்பதால் இவர், “வாசீஸ்வரர்என்றழைக்கப்படுகிறார்.

மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை, கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலைச் செய்யமுடியவில்லை. எனவே, மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி, தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, சிவனை வழிபட்டு, தோஷம் நீங்கப்பெற்றார். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் உடனுறை வண்டார்குழலி திருக்கோயில், திருவாலங்காடு

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் உடனுறை வண்டார்குழலி திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம்.

+91 – 4118 – 272 608 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை திறந்து இருக்கும்.

மூலவர் வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்
அம்மன் வண்டார்குழலி
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் முத்தி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவாலங்காடு
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது இரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, “நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார்.

அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது எனத் தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,”என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின், என்னை வழிபட்டால் தான் முழுப் பலன் கிடைக்கும்என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனிக் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.