Category Archives: திருநெல்வேலி

சங்கரலிங்கசுவாமி திருக்கோயில், கோடரங்குளம்

அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில், கோடரங்குளம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 223 821, 93602 19237

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சங்கரலிங்கசுவாமி
அம்மன் கோமதி அம்பாள்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் கோடரங்குளம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த சிவபக்தர் உஞ்சவிருத்தி (தானம்) பெற்று வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் காகத்திற்கு சாதம் வைத்தபோது அவை சாதத்தை வனத்திற்குள் கொண்டு சென்றதை கண்டு பின்தொடர்ந்தார். காகம் ஓரிடத்தில் சாதம் வைத்து, மலர் தூவி வழிபட்டதைக் கண்டு தோண்டியபோது சுயம்பு இலிங்கம் இருந்ததைக் கண்டார். அதற்குப் பூஜை செய்து வழிபட்டார். ஒருசமயம் அவர் ஊருக்குள் வராமல் போகவே, மக்கள் வனத்தினுள் சென்று பார்த்தனர். அங்கு சிவன் குடியிருப்பதாக கூறிவிட்டு, அவர், இலிங்கத்தில் ஐக்கியமானார். அதுவே சங்கரலிங்கம் ஆனது. பின் மக்கள் இவ்விடத்தில் கோயில் எழுப்பினர்.

பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 223 268

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாபநாசநாதர்
அம்மன் உலகம்மை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இந்திரகீழ க்ஷேத்திரம்
ஊர் பாபநாசம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரைப் பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமணக் கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.

அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை, குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரைக் கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை பாபநாசநாதர்என்கின்றனர். இத்தலத்திற்கு இந்திரகீழ க்ஷேத்திரம்என்ற பெயரும் இருக்கிறது.