Category Archives: சேலம்

தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர்

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தான்தோன்றீஸ்வரர்
அம்மன் அறம்வளர்ர்த்தஅம்மை
தல விருட்சம் மா, பலா, இலுப்பை மூன்றும் ஒரேமரம்
தீர்த்தம் வசிஷ்ட நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேள்வியூர்
ஊர் பேளூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

அர்ச்சுனன் தமிழகத்தில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, இங்குள்ள தீர்த்த மலைக்கு வந்துள்ளான். சிவபெருமான் மீது பக்தி கொண்டு சிவபூஜை செய்தான். பின்னர், திருமாலும் சிவபெருமானை நினைத்து,”உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாகஎன்றார். சிவனை நினைத்து அர்ச்சுனனும் பிறைவடிவமானதொரு பாணத்தை மலையடிவாரத்தில் செலுத்த, சிவன் மகிழ்ச்சி அடைந்து தன் கட்டுப்பாட்டில் உள்ள கங்கை நதியின் பத்தில் ஒரு பகுதி அந்த அம்பு பாய்ந்த இடத்திலிருந்து பெருகுமாறு செய்தார். சிவன் தனது சடைக்கற்றையிலிருந்து கங்கையை வெளிப்படச்செய்தார். அந்த நீர் வெண்மை பிரவாகமாக தோன்றியது. இந்நதியே வெள்ளாறு எனப் பெயர் பெற்றது. இத்தலத்துக்கு பெருமை சேர்க்கும் வசிஷ்ட மாமுனி, சிவனருள் பெற்று இங்கு தங்கி வேள்வி செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

மா, பலா, இலுப்பை மரங்கள் மூன்றும் ஒரே மரமாக இருப்பது இத்தலத்தின் அதிசயம். தான்தோன்றீசுவரர் வழிபாட்டிற்காக அவ்வாலயத்தில் பலாமரம் ஒன்றை வசிட்டர் உண்டாக்கினார். இம்மரத்திற்காக கோயில் கட்டப்படும் காலத்திலேயே மூடுகற்களில் வளைவுகள் வெட்டி ஒதுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் இம்மரம் ஆலயத்திற்கு முற்பட்டதெனத் தெரியவரும். வசிஷ்ட மாமுனி யாகம் செய்ய வேண்டி பரமசிவனை வேண்ட, சிவன் விரும்பிய வண்ணம் இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் தங்கினார். வசிஷ்டர் செய்த யாக பூமியில் உள்ள திருமண்ணே இன்றும் கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது. வசிஷ்ட முனிவரது யாகசாலையில் உண்டாக்கிய விபூதியானது மேனியில் பட்டால் செல்வம் பெருகும்.

சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம்

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.

+91-427-245 0954, 245 2496

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார்
அம்மன் சுவர்ணாம்பிகை, மரகத வல்லி, பச்சை வல்லி
தல விருட்சம் பாதிரி மரம்
தீர்த்தம் அமண்டுகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சுகவனம், சதுர்வேதமங்கலம்
ஊர் சேலம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.

பிரம்மதேவன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடிகிறது என்ற இரகசியத்தை சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்தவர்களில், சிவநெறிகளில் சிறந்த சுகர் என்ற முனிவர் சரஸ்வதியிடம் போய் சொல்லிவிட்டார். கோபம் கொண்ட பிரம்மன், சுகர் முனிவரைக் கிளியாக்கி சாபம் கொடுத்துவிட்டு, பாபநாசப்பகுதியில்(இப்போதைய கோயில் பகுதி) வந்த சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபட்டுவந்தால் சாபம் நீங்கும் என்றும் கூறினார். அதேபோல் வந்து எண்ணற்ற கிளிகளோடு தானும் ஒரு கிளியாக சுகர் முனிவர், சிவபெருமானை வழிபட்டு வரும் வேளையில் வேடன் ஒருவன் கிளிகளை விரட்டியடிக்க, அவை புற்றின் மீது பதுங்கின. கோபம்கொண்ட வேடன் புற்றை வெட்டினான். கிளிகள் எல்லாம் செத்தன. அப்போது இராசகிளி(சுகர்) மட்டும் சுயம்பு மூர்த்தியின் முடிமீது சிறகை விரித்து, காத்தது. வேடன் கிளியைவெட்ட இரத்தம் பீறிட்டது. கிளி இறக்க சுயம்புவின் தலையில் இரத்தம் பீறிட்டது. சுயம்புவாகிய இறைவனை உணர்ந்த வேடன் தன் வாளால் தன்னைத்தானே வெட்டி மாய்த்துக்கொண்டான். சிவனடி சேர்ந்ததால் கிளியுருவம் மறையப்பெற்ற சுகர் முனிவர், “பெருமானே, நீங்கள் சுகவனேஸ்வரராக இத்திருத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருள் தர வேண்டும்என்று கேட்டுக் கொள்ள, அதன்படியே இறைவனும் அருளியதாக வரலாறு கூறுகிறது.