Category Archives: கடலூர்

அருள்மிகு வள்ளலார் திருக்கோயில், வடலூர்

அருள்மிகு வள்ளலார் திருக்கோயில், வடலூர், கடலூர் மாவட்டம்.

+91- 4142- 259 250, 94865 47041

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வள்ளலார்
தீர்த்தம் தீஞ்சுவை தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வடலூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

கடலூர் மாவட்டம், மருதூரில் வாழ்ந்த இராமைய்யா, சின்னம்மை தம்பதியின் மகனாக 1823ம் ஆண்டு பிறந்தவர் இராமலிங்கம். தினமும் ஒரு அடியாருக்கு அன்னமிட்ட பிறகு சாப்பிடுவது சின்னம்மையின் வழக்கம். தாயின் இந்தக் குணம், பிள்ளைக்கும் ஏற்பட்டது. இதுவே பிற்காலத்தில் அவர் ஏழைகளுக்கு அன்னமிடும் தருமச்சாலை அமைப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

இறைவன் ஒளி வடிவில் அருளுகிறார் என்பதை உணர்த்த வடலூரில் வள்ளலார் சத்திய ஞான சபையை உருவாக்கினார். எண்கோண வடிவில் தாமரை மலர் போன்று அமைந்த இச்சபையின் முன்பகுதியில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. தினமும் காலை 11.30 மணி மற்றும் இரவு 7.30க்கு நடக்கும் பூஜையின்போது இந்த தீபத்துக்கும், இதன் பின்புறமுள்ள திரைகளுக்கும் பூஜை நடக்கும். பின்பு, முன்மண்டபத்திலிருக்கும் சிற்சபை, பொற்சபையில் தீபாராதனை செய்யப்படும். ஞானசபையின் நுழைவு வாயிலில், “புலை கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்” (மாமிசம் உண்ணாதவர்கள்) என்று எழுதப் பட்டிருக்கிறது. அசைவத்தை நிறுத்த விரும்புவோர் இதனுள் சென்று வருகின்றனர். இச்சபையில் வள்ளலார் இயற்றிய அருட்பெருஞ்ஜோதி அகவல்பொறிக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர்

அருள்மிகு திருவரசமூர்த்தி திருக்கோயில், மெய்யாத்தூர், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம்.

+91 94434 69361, 95851 11871 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவரசமூர்த்தி
அம்மன் சொக்காயி அம்மன்
தலவிருட்சம் அரசமரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மெய்யாத்தூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவனுக்கும், அந்தகாசுரன் என்பவனுக்கும் இடையே போர் நடந்தது. சூரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து அசுரர்கள் தொடர்ந்து தோன்றினர். இவர்களை ஒழிக்க, சிவன் தன்னிடமிருந்து தோன்றிய அக்னியிலிருந்து, யோகேஸ்வரி மற்றும் மகேஸ்வரி என்ற சக்தியை உருவாக்கினார். போரில் ஈடுபட்ட சிவனுக்கு இந்த சக்திகள் உதவி செய்து அரக்கர்களை ஒழித்தனர். போரில் வெற்றி பெற்ற சிவனுக்கு வாழ்த்துக்கூறிய சப்தகன்னிகள் மெய்யாத்தூரில் உள்ள ஆண்டவர் கோயிலில் எழுந்தருளினர். இந்தக் கோயிலில் திருவரசமூர்த்தியும், சொக்காயி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

இவ்வூரில் குடியிருப்பவர்கள் தங்களை திருட்டு மற்றும் தீமையான செயல்களில் இருந்து சப்தகன்னியர் பாதுகாப்பதாக நம்புகின்றனர். விஜயதசமியன்று சொக்காயி அம்மனை நாம் இருந்த இடத்தில் இருந்தபடியே மனதில் நினைத்து, விரதம் இருக்க வேண்டும். நமக்கு வசதிப்படும் நாளில் இங்கு வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, புடவை சாத்தினால் எண்ணியது நிறைவேறுவதுடன், மகிழ்ச்சியான வாழ்வும், சுபிட்சமும் சவுபாக்கியமும் ஏற்படுவதாக நம்பிக்கை. வேப்பிலை பாவாடை கட்டி தீ மிதிக்கும் சடங்கும் இங்கு நடக்கிறது. விவசாயிகள் நல்ல விளைச்சலுக்காக இந்த மாதர்களிடம் வேண்டிக் கொள்ளலாம்.