Category Archives: கடலூர்

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், சிங்கிரிகுடி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், சிங்கிரிகுடி, கடலூர் மாவட்டம்.

+91- 413-261 8759, +91-4142-224 328 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நரசிம்மர்

உற்சவர்

பிரகலாத வரதன்

தாயார்

தாயார்: கனகவல்லி

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

ஜமத்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம்

ஆகமம்

வைகானசம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

சிங்கிரி குடி

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

நரசிம்மர், தனது பக்தன் பிரகலாதனுக்காக இரண்யனை வதம் செய்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் கோயில்களில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் இலட்சுமியை மடியில் அமர்த்திய கோலத்தில் அருள்பாலிப்பார். சில கோயில்களில் யோக நிலையில் தனித்து காட்சி தருவார். கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.

பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார். இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்தார். இதைக் குறிக்கும் வகையில், இங்கு மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் ஆகியோரும் உள்ளனர். இவ்வாறு ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள். இத்தலம் மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் தன் 16 திருக்கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், க்ஷீரிகா எனப்படும் குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவை ஏந்தியுள்ளார். மற்ற கரங்களால் இரணிய சம்ஹாரம் நடக்கிறது. குடலைக் கிழிப்பது, குடலை மாலையாகப் பிடித்திருத்தல், இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது ஆகிய சாகசங்களைச் செய்கிறார்.

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், சி.சாத்தமங்கலம்

அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், சி.சாத்தமங்கலம், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாஸ்தா
அம்மன் பூரணை, புஷ்கலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சாஸ்தாமங்கலம்
ஊர் சாத்தமங்கலம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு திருடர்களால் மிகவும் தொந்தரவு ஏற்பட்டு வந்தது. இதனால் வருந்திய மக்கள் காவல் தெய்வமான சாஸ்தாவை வழிபட விரும்பினர். இதன் அடிப்படையில் இங்கு பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு திருடர்களின் தொந்தரவு நீங்கி நிம்மதி ஏற்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் திருடர்கள் நுழைந்து பூரணை, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திரரின் ஐம்பொன்சிலைகளை திருடி சென்று விட்டனர். பின்னர் ஹரிஹரபுத்திரரின் அருளால் அவர்களே இச்சிலைகளை இங்கு கொண்டு வந்து வைத்து விட்டு சென்று விட்டனர். கையில் சாட்டையுடன் உள்ள இந்த சாஸ்தாவை வணங்கினால் திருடர்கள் மற்றும் எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் குடிகொண்டுள்ள ஹரிஹரபுத்திர சுவாமி சாஸ்தா மூலஸ்தானத்தில் இருபுறமும் இரண்டு அம்பாளுடன் (பூரணை, புஷ்கலை) கருங்கல் சிலா விக்ரகமாக மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளார். மூல விக்ரகமான பூரணை புஷ்கலை மற்றும் ஹரிஹரபுத்திர சுவாமி மூன்று தனித்தனி திருமேனிகளும் சேர்ந்து ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அத்துடன் அபூர்வ சக்தி வாய்ந்த இந்தக் கல் தட்டினால் ஒலி வரும் சிறப்புப் பெற்றது. இங்குள்ள சாஸ்தாவிற்கு வாகனமாக யானை வாகனம் உள்ளது. இக்கோயிலில் சாஸ்தாவிற்கு நேர் எதிரில் மிகப்பெரிய சுதையால் ஆன நந்தி ஒன்று உள்ளது. அதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத சிறப்பாகும். மேலும் ஐயனார் கோயிலுக்கே உரிய விதத்தில் சுமார் பத்தடி உயரம் கொண்ட நான்கு குதிரைகள் சுதையால் செய்யப்பட்டுள்ளன. சாஸ்தா கையில் சாட்டையுடன் இருப்பது சிறப்பு.