Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம்

அருள்மிகு வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம்

முருகப்பெருமான் திருச்செந்தூரில் பத்மாசுரனை எதிர்த்த போது, யானைமுகம் கொண்ட அவனது சகோதரன் முருகனுடன் போரிட்டான். வெற்றிவேலை எய்து அவன் தலையைக் கொய்தார் முருகப்பெருமான். ஆனைத்தலை விழுந்த இடம் ஆலந்தலைஎன்று மருவி விட்டது. இவ்வூர் திருச்செந்தூருக்கு அருகில் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிங்கமுக அசுரனையும் கல்லாமொழிஎன்னுமிடத்தில் வெற்றி கொண்டார். அக்காலத்தில் கல்லால மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்போது அவ்வூர் காயாமொழிஎனப்படுகிறது.

தன் உடன்பிறந்தவர்கள் இருவரையும் கொன்ற முருகனை மிக ஆவேசத்துடன் போருக்கு அழைத்தான் சூரபத்மன். சீறி வரும் பகையைத் தன் சிரிப்பால் அடக்கிடும் முருகப்பெருமான் வெற்றிப் புன்னகையுடன் வேலை சூரனின் மீது விடுத்தார். வேலால் குத்தப்பட்ட சூரனின் உடலிலிருந்து குருதி சிந்தியது. அசுரனின் ரத்தம் பூமியில் பட்டால் பூமாதேவியின் பொறுமை குணம் மாறிவிடும் என்று எண்ணி, முருகன் காளி தேவியை வேண்டினார். காளி உடனே வந்து சூரபத்மனின் ரத்தத்தைக் குடித்து வீரமனோகரிஎன்ற திருநாமத்துடன் அமர்ந்தாள்.

அவ்விடமே திருச்செந்தூரிலிருந்து 11கி.மீ. தொலைவில் அமைந்த குலசேகரன் பட்டினம் ஆகும். தீயவர்களை அழித்து, நல்லவர்களைக் காக்கும் நோக்கில் இவ்விடத்தில் காளி வீரமனோகரியாக வீற்றிருக்கிறாள்.

அருள்மிகு வடக்கூர் அம்மன், மணமேல்குடி

அருள்மிகு வடக்கூர் அம்மன், மணமேல்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

பத்தினியாக வாழ்ந்த நல்லதங்காள், வறுமையின் கொடுமையால் தன் குழந்தைகளைக் கிணற்றில் வீசி, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தை சொல்லில் வடிக்க இயலாது. கடும் பஞ்சம் தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், குடிக்கக்கூட தண்ணீர் இன்றி மனிதர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். சுமார் பன்னிரண்டு வருடங்கள் மக்களைக் இப்பஞ்சம் வாட்டியதாம். இந்த காலகட்டத்தின் இறுதி ஆண்டில்தான் நல்லதங்காள் இறந்தாள்.

இதே ஆண்டில், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைச் சீமையில் அந்த அதிசயம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்குக் கிழக்கே 37-வது கி.மீ. தூரத்தில் உள்ளது மணமேல்குடி. பெயருக்கு ஏற்றாற்போல் திரும்பிய பக்கமெல்லாம் மணல்.

இந்த ஊர், கிழக்கு கடற்கரையை உச்சி முகர்ந்தபடி உள்ளது. கிராமமா, நகரமா என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி இருக்கும் இந்த ஊரின் வடக்குத் திசையில் இருக்கும் ஒரு பகுதியை, வடக்கு மணமேல்குடி என்றும் வடக்கூர் என்றும் சொல்கிறார்கள்.

முற்காலத்தில், இந்தப் பகுதி(வடக்கூர்) இலுப்பை மரக் காடாக இருந்தது. புதர்கள் நிறைந்த இந்த வனத்துக்குள் எவரும் போக மாட்டார்கள்.