Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் திருக்கோயில், திருமால்பாடி

அருள்மிகு திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் திருக்கோயில், திருமால்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் என்னும் சிறிய கிராமத்தின் அருகே உள்ளது இந்த அழகிய, மிகப் புராதனமான திருமால்பாடி திருத்தலம். இக்கோயிலுக்கு வேலூரில் இருந்து செல்லலாம். வேலூரில் இருந்து சுமார் 90 km தொலைவில் உள்ளது இத்திருத்தலம். வேலூரில் இருந்து ஆரணி, வந்தவாசி, தேசூர் வழியாக இக்கோயிலை அடையலாம். ஒரு சிறிய குன்றின் மேல் 106 படிகள் ஏறிச் சென்று தெய்வ தரிசனம் பெறலாம். பல ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிறது இக்கோயில்.

அக்காலத்தில் இது போன்ற உள்ளடங்கிய கிராமங்களில் சாலை வசதிகள் மிகக் குறைவாக இருந்த நிலையில் எப்படித்தான் இது போன்ற அழகிய திருக்கோயில்களைக் கட்டினார்களோ என்று நினைக்கும் போது வியப்பாக உள்ளது. கி.பி. 1136-ம் ஆண்டு பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது இத்திருக்கோயில். கி.பி. 1140, கி.பி. 1135, கி.பி. 1529 போன்ற பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் இக்கோயில் பலமுறை சீரமைக்கப் பட்டுள்ளதை அங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

தல மூர்த்தி : ஸ்ரீ ரெங்கநாதர் (வேதநாதர்)

தாயார் : ஸ்ரீ வேதநாயகி.

தல தீர்த்தம் : நாரதர் தீர்த்தம்

சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர், வேதநாயகி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரெங்கநாதர், சயனதிருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். விண்ணுலகம், மண்ணுலகம் என அளந்துவிட்டு மூன்றாவது அடியாக மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது தன் அடியை வைத்து அளந்ததற்கு அடையாளமாக தனது மூன்று விரல்களைக் காட்டியவாறு, ஆதிசேஷன் மீது சயனித்தபடி, தலைக்கு மரக்கால் வைத்து, தனது திருவடியை தாமரை மலர் மீது வைத்து தரிசனம் தருகிறார். அருகே பூதேவி அமிர்தவல்லியாகவும், ஸ்ரீதேவி ஸ்ரீ வேதவல்லியாகவும் காட்சி தருகின்றனர்.

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், பிரம்மதேசம்

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், பிரம்மதேசம் போஸ்ட், அம்பாசமுத்திரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 251 705 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தென்னழகர் (விண்ணகர்பெருமான்)
உற்சவர் சவுந்தர்ராஜப்பெருமாள்
தாயார் சவுந்திரவல்லி, சுந்தரவல்லி
தல விருட்சம்
தீர்த்தம் மார்க்கண்டேயர் தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பொதியில் விண்ணகரம்
ஊர் கோவில்குளம், அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில், சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார். சுவாமி, அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு, மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.