Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வட திருமுல்லை வாயில்

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வட திருமுல்லை வாயில், சென்னை மாவட்டம்.

+91-44- 2637 6151 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12மணி வரை, மாலை4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாசிலாமணீஸ்வரர்
அம்மன் கொடியிடை நாயகி
தல விருட்சம் முல்லை
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் வடதிருமுல்லைவாயில்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர்

பல்லாண்டுகளுக்கு முன்பு, வனமாக இருந்த இப்பகுதியில் தங்கியிருந்த வாணன், ஓணன் எனும் இரண்டு அசுரர்கள் முனிவர்களைத் துன்புறுத்தினர். அவர்களை விரட்ட வந்த தொண்டைமான் மன்னன் போரிட்டும் வெல்ல முடியாமல் திரும்பினான். அப்போது, பட்டத்து யானையின் கால் ஒரு முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டது. மன்னன், யானையின் மீது இருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினான். வெட்டப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது. அவன் பயந்து போய், கீழே இறங்கி பார்த்தபோது, மண்ணிற்கு அடியில் இருந்த இலிங்கத்தை பார்த்தான். இலிங்கத்தின் மீதிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டான். சிவபெருமானின் வடிவமான இலிங்கத்தை வெட்டிய வருத்தத்தில், உயிரையே மாய்க்கச் சென்றான். அப்போது சிவன் அவனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அம்பாளைக் கூட அழைக்காமல் தனியாக மன்னனுக்கு காட்சி தந்தார்.

வெட்டுப்பட்டதற்காக வருந்த வேண்டாம் என்றும், வெட்டுப்பட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே விளங்குவோம்என்றும் கூறி அருள் செய்தார். அதன்பிறகு இங்கு வந்த அம்பாள் சுவாமிக்கு வலதுபுறத்தில் எழுந்தருளினாள்.

பின் சிவன், நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். மன்னன், அசுரர்கள் வைத்திருந்த இரண்டு வெள்ளெருக்கம் தூண்களை எடுத்து வந்து இவ்விடத்தில் வைத்து, மாசிலாமணீசுவரருக்குக் கோயில் கட்டினான். இவ்விரு தூண்களும் சிவன் கருவறைக்கு முன்பு தற்போதும் உள்ளதைக் காணலாம். இங்குள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக மன்னருக்கு துணையாகச் சென்றதால், சுவாமியை பார்த்தபடி இல்லாமல், எதிர்த்திசையை நோக்கித் திரும்பியபடி உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் தனி சன்னதி உண்டு.

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி – திருவலிதாயம், சென்னை

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி திருவலிதாயம், சென்னை மாவட்டம்.

+91 – 44 – 2654 0706 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30மணி முதல் 12மணி வரை, மாலை4.30 மணி முதல் 8.30இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
அம்மன் ஜெகதாம்பிகை
தல விருட்சம் பாதிரி, கொன்றை
தீர்த்தம் பரத்வாஜ் தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவலிதாயம்
ஊர் பாடி திருவலிதாயம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

வியாழபகவானின் மகனான பரத்வாஜர், கரிக்குருவியின்(வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். இலிங்கத்திற்குப் பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்து, பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான், இத்தலம் திருவலிதாயம்என்றும், சிவன் வலியநாதர்என்றும் அழைக்கப்படுகிறார்.

வியாழன், தான் செய்த தவறால், தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார்.