Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தண்டாயுதபாணி (மருதாசலமூர்த்தி)
அம்மன் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் மருது சுனை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் மருதமலை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, “பாம்பு வைத்தியர்என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தினப் பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, “உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையேஎன்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பக்தர்கள் இவரை, “மருதமலை மாமணிஎன்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் இராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் ஏழாம்படை வீடாகக் கருதப்படுகிறது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர், நீலகிரி மாவட்டம்.

+91- 423- 250 9353 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

தண்டாயுதபாணி

தலவிருட்சம்

அரசமரம்

பழமை 30 வருடங்களுக்கு முன்
ஊர்

மஞ்சூர்

மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

30 வருடங்களுக்கு முன்பு குரு கிருஷ்ண நந்தாஜி என்பவர் இங்குள்ள காடுகளில் சுற்றித்திரிந்துவிட்டு இப்போதுள்ள மலைக்கு அருகில் உள்ள சிவன் குகைக்குள் சிலகாலம் கடும் தவம் மேற்கொண்டார். பின்பு அழகிய எழில் சூழ்ந்த அன்னமலைக் குன்றில், தண்டாயுதபாணிக் கடவுளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்துள்ளார். நாளடைவில் முருகப்பெருமானின் அருள் பரவ, இக்கோயில் பிரபலமடையத் தொடங்கியது. அமைதியும் எழில் சூழ்ந்த மலைக்குன்றுகளும் அமைந்து காண்பவர் கண்களையும் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பாக அன்னம் இட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் நாலாபுறமும்மலைகள் சூழ கோயில் அமைந்துள்ளது கண்கொள்ளாக் காட்சி. இந்த சுற்றுச்சூழல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதி தருகிறது. படுகர் இன மக்கள் இங்கு பஜனை நடத்துகின்றனர். இத்தலத்து முருகன் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா நந்தாஜியின் கனவில் முருகன் வந்து சொல்கிறார். அதன்படி அடுத்தநாள் முருகனுக்கு பூசாரிகள் (ஆண்டி அலங்காரம், சர்வ அலங்காரம், ராஜ அலங்காரம்இன்னும் பிற) முருகனின் கட்டளைப்படி அலங்காரம் செய்கின்றனர். இது இன்றளவும் நடந்துவரும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.