Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர், வேலூர் மாவட்டம்

+91- 416 – 221 2761, 94869 39198, 94438 00039 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்பிரமணியர், காங்கேயன்
உற்சவர் சண்முகர்
தீர்த்தம் சரவணப்பொய்கை
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காங்கேயநல்லூர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

தேவர்களுக்கு அசுரர்களால் துன்பம் உண்டாகவே, தங்களைக் காத்தருளும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு, அக்னி இருவரும் கங்கையில் சேர்த்தனர். அதிலிருந்து ஆறு குழந்தைகள் உருவாகி, கங்கையிலிருந்த தாமரை மலர்களில் தவழ்ந்தனர். அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்பு பார்வதி, ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினாள். முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தந்தார். கங்கையில் குழந்தையாக தவழ்ந்ததால் முருகனுக்கு, “காங்கேயன்என்ற பெயர் ஏற்பட்டது. இப்பெயரிலேயே இத்தலத்தில் முருகன் அருளுகிறார்.
அருணகிரியார் இத்தலம் வந்தபோது, சுவாமிக்குத் தயிர் சாத நிவேதனம் படைத்து பூஜை செய்து வழிபட்டார். அப்போது ஆறு அடியார்கள் அங்கு வந்தனர். அருணகிரியார், முருகனுக்கு படைத்த தயிர் சாதத்தை, அவர்களுக்கு படைத்தார். முருகனே இவ்வாறு ஆறு அடியார்களாக வந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் தற்போதும் இத்தலத்தில், முருகனுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஆறு அடியவர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம்

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்ரமணியர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் செங்கம், வில்வாரணி
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்த கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்குப் பூஜை செய்து வந்தார். வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு குதிரையில் சென்று வருவார். அவர், தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகையன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார். ஒரு ஆண்டில் சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் மனம் நொந்த அவர்கள் அன்றிரவு உறங்கும் போது, இருவர் கனவிலும் தோன்றிய முருகன், “நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி, கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுங்கள்எனக் கூறினார். மறுநாள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி இலிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் இலிங்கத்திற்குக் குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது. குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து இலிங்கத்தை முருகனாகக் கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது. நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி; நெருப்பின் நிறம் கணபதி; அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், இலிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது. ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் இங்கு வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை உள்ளது. சிவன்தான் இலிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால், சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு இலிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார்.