Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், மணக்கால்

அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், மணக்கால், லால்குடிக்கு அருகில், திருச்சி மாவட்டம்.

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்ரமண்யசுவாமி

அம்மன்

வள்ளி, தெய்வானை

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

மணக்கால்

மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

இந்த உலகையே ஆள்பவர் சிவன். அவரது நெற்றிப்பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். ஒருமுறை பிரம்மனுக்கு ஓம்என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தார் முருகன். அப்போது சிவபெருமான் முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருளை தனக்கு உபதேசிக்கும்படி கூறினார். முருகனும் தனது அப்பனான சிவனின் காதில் உபதேசம் செய்தார். தான் அறிந்து கொண்ட உபதேசத்தை சிவன் இவ்வுலகம் முழுவதும் அறிவித்தார். அதன்படி திருமாலும் பிரணவ மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டார். தனக்கு சிவன் மூலமாக மந்திர உபதேசம் செய்த முருகனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பெருமாள் தனது திருவிழாவின் போது, இங்குள்ள முருகன் கோயிலுக்கு எழுந்தருளுகிறார் எனத் தலவரலாறு கூறுகிறது. இந்த முருகனின் ஆலய வளாகத்தில் யஜுர் வேத பாடசாலை அமைத்திருப்பதால், எப்போதும் வேதமந்திர ஒலி இங்கே நிறைந்திருக்கிறது. அந்த மந்திரங்களின் அதிர்வு நாள் தோறும் இங்கு வரும் பக்தர்களின் உடற்பிணி, மனநோய்களைப் போக்குவது கண்கூடு. தன்னை ஆராதிக்கும் அனைவருக்கும் மணக்கால் முருகன் தன் அருளை வாரி வழங்குவதில் வள்ளலாகவே திகழ்கிறான் என்று பக்தர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை. கிழக்கு திசை நோக்கிய ஆலயம். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். கருவறையில் சுப்ரமண்ய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலது புறம் உற்சவர் திருமேனி உள்ளது. இந்த ஊரின் மத்தியில் உள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆவணி மாதம் நடைபெறும் திருவிழாவின்போதுதான் பெருமாள், தன் மருமகனான முருகனைப் பார்க்க ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் இங்கே வந்து சற்றுநேரம் தங்கி சேவை சாதிப்பார்.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2478 0436,93828 89430 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 12.30மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணியசுவாமி

தலவிருட்சம்

வில்வம்

தீர்த்தம்

சரவணபொய்கை

ஆகமம்

சிவாகமம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குன்றத்தூர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார்.

பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் கந்தழீஸ்வரர்என்ற பெயரில், தனிக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர். 84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோயில் இது. இக்கோயிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகனை, வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும். இவ்வாறு சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.