Category Archives: சிவ ஆலயங்கள்

ஐராவதீஸ்வரர் திருக்கோயில், ஆனையூர்

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், ஆனையூர், மதுரை, மதுரை மாவட்டம்.

மூலவர் ஐராவதீஸ்வரர் (திருஅக்னீஸ்வரமுடைய பரமசுவாமிகள்)
உற்சவர் சந்திரசேகர், நடராஜர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பொற்றாமரைக்குளம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஅக்னீஸ்வரம்
ஊர் ஆனையூர்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன்பு, வேடுவமன்னன் ஒருவன் வாலாந்தூர் பகுதியினை ஆண்டு வந்தான். அவனது ஆட்சியின் போது, உத்தப்பநாயக்கனூர் எனும் நகரம் வாணிப நகரமாக இருந்தது. அங்கே வணிகர்கள் பலர், தற்போது கோயில் வீற்றுள்ள கற்றாழைக்காடு வழியாக அடிக்கடி சென்று வந்தனர்.

அப்போது, அக்கற்றாழைக் காட்டில் வசித்த வெள்ளையானை (ஐராவதம்) ஒன்று அடிக்கடி கோயிலின் எதிரே இருந்த பொற்றாமரைக் குளத்தில் இருந்து நீரினை தனது தும்பிக்கையில் உறிந்து, கற்றாழைக் காட்டிற்குள் செல்வதைக் கண்டு திகைத்த வணிகர்கள் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தனர். மன்னர் உத்தரவின் பேரில் பணியாட்கள் அக்காட்டில் இருந்த கற்றாழைகளை வெட்டிட, அங்கே ஓர் கதம்பமரத்தின் அருகே இருந்த கற்றாழையினை வெட்டியபோது, ரத்தம் பீறிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், அவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக வீற்றிருந்ததைக்கண்ட மன்னர், ஐராவதம் தொடர்ந்து சிவலிங்கத்திற்கு பொற்றாமரைக் குளத்தில் இருந்து நீரினை எடுத்து அபிஷேகம் செய்ததை அறிந்து வியப்புற்றார். பின், சுயம்புலிங்கமாக வீற்றிருந்த சிவபெருமானுக்கென தனியே கோயிலை எழுப்பி வழிபட்டார்.

ஐமுக்தீஸ்வரர் ஆலயம், பெரியபாளையம்

அருள்மிகு ஐமுக்தீஸ்வரர் ஆலயம், பெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம்.

+044-27927824, 9444086357

காலை 6:00 – 11:00 மாலை 4:00 – 8:00

சென்னையில் இருந்து பவானி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் முன்பாக,

பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது அன்னபூர்ணாம்பா சமேத ஐமுக்தீஸ்வரர் ஆலயம். இந்தத் தலத்து இறைவனைப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. பஞ்ச பூதங்கள் தங்கள் சாபம் நீங்குவதற்காக வணங்கித் துதித்துள்ளனர். புண்ணிய நதியாம் ஆரணி நதிக்கு அந்தப் பக்கம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில்; இந்தப் பக்கம் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில். ஆலயம் சிறியது என்றும் சொல்ல முடியாது; பெரியது என்றும் சொல்ல முடியாது. ராஜகோபுரம், விமானங்கள், பிராகாரங்கள்,

ஏராளமான பரிவார தெய்வங்கள் என்று ஐமுக்தீஸ்வரர் ஆலயம் அருமையாக காட்சி தருகிறது. மேற்குப் பார்த்த சிவத் தலம். வடக்கு நோக்கி ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார். ஆயினும், ஆலயத்துக்கான பிரதான நுழைவாயில் கிழக்குப் பக்கம்தான் இருக்கிறது. தவிர, வடக்குப் பக்கமும் ஒரு வாயில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி விசேட நாட்கள் தவிர, மற்ற தினங்களில் இந்த வாயிலை மூடியே வைத்திருக்கிறார்கள்.

ஐமுக்தீஸ்வரர் இலிங்க வடிவத்தை மாபெரும் தவமுனி வால்மீகி முனிவர் நிறுவி வணங்கியதாகத் தல புராணம் கூறுகிறது. இந்திய தேசமெங்கும் சென்று இறை வழிபாடு செய்து வந்த வால்மீகி முனிவர், ஒரு முறை இந்த ஆரணி நதிக் கரைக்கும் வந்தார். பொங்கிப் பிரவாகிக்கும் நதியின் அழகிலும், இதன் கரை அமைந்துள்ள அமைப்பிலும் மயங்கிய முனிவர், இங்கேயே சில காலம் தங்கி, சிவனை நினைந்து தவம் புரிந்தார். மாமுனியின் கடும் தவத்துக்கு இரங்கிய எம்பெருமானார் பார்வதிதேவியுடன் அவருக்குக் காட்சி தந்து அருளினார். வால்மீகி முனிவர் மிக மகிழ்ந்தார். ”யாம் பெற்ற இந்த இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் இறைவாஎனவே, தாங்கள் இங்கேயே உறைய வேண்டும்என்று கோரிக்கை வைத்தார். எம்பெருமானும் மனம் கனிந்தார். இலிங்க சொரூபமாக இதே தலத்தில் குடி கொண்டார். இங்கே ஓர் ஆலயம் எழுப்பி, தினமும் மூன்று காலம் பூஜைகள் நடத்தி வழிபட்டார் வால்மீகி. முனிவர் தங்கி இருந்த இந்த இடத்துக்கு, ‘வால்மீகி ஆசிரமம்என்ற பெயரும் இருப்பதாகத் தல புராணம் சொல்கிறது. தவிர, பஞ்சபூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் அதிபதியான தேவதைகள் தங்களது சாபம் தீர்வதற்காக இந்த இறைவனிடம் வந்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து பேருக்கும் சாபம் நீக்கி, முக்தி அளித்ததால்தான் ஐமுக்தீஸ்வரர்என இறைவன் அழைக்கப்பட்டதாக ஊரார் கூறுகின்றனர்.