அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில், சித்துக்காடு

அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில், சித்துக்காடு, தெற்கு மாட வீதி, 1/144 திருமணம் கிராமம், பட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட், சென்னை மாவட்டம்.

+91 93643 48700, 93826 84485 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 10 மணி வரை,மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தாத்திரீஸ்வரர்
தாயார் பூங்குழலி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சித்துக்காடு
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது. சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக்காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.

மன்னன் இங்கு கோயில் திருப்பணியைத் துவங்கியபோது, இங்கிருந்த பூந்தோட்டத்தில் அம்பாள் சிலை கிடைக்கப்பெற்றான். பூங்குழலி எனப் பெயர் சூட்டி அம்பாளுக்கு சன்னதி எழுப்பினான். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுகார்பேட்டை

அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுகார்பேட்டை, சென்னை, சென்னை மாவட்டம்.

+91-44- 2538 2142, 2539 2869 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்ன வெங்கடேசர்
உற்சவர் வெங்கடேசப்பெருமாள்
தாயார் அலர்மேலுமங்கை
தீர்த்தம் வராக புஷ்கரிணி
ஆகமம் வைகானசம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சவுகார்பேட்டை
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு லால்தாஸ் என்ற பெருமாள் பக்தர் இப்பகுதியில் வசித்து வந்தார். சந்நியாசியான இவர் தினமும் திருப்பதிப் பெருமாளை மனதில் நினைத்து வணங்கியபின்பே, பணிகளை துவக்குவார். இவ்வழியாக தலயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற சேவை செய்வதையும் வழக்கமாககொண்டிருந்தார். அவருக்கு திருப்பதி சென்று பெருமாளை வணங்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் நீண்டநாட்களாக அந்த ஆசை நிறைவேறவில்லை. நாளடைவில் அந்த ஆசையே ஏக்கமாக மாறியது. அவருக்கு அருள்புரிய எண்ணினார் திருமால். ஒருநாள் இரவில் லால்தாஸின் கனவில் தோன்றிய சுவாமி, தனக்கு அவரது இருப்பிடத்திலேயே கோயில் எழுப்பி வழிபடும்படி கூறினார். மகிழ்ந்த சந்நியாசி, கோயில் கட்ட ஆயத்தமானார். ஆனால், அவரிடம் பணமில்லை. எனவே மக்களிடம், கோயில் கட்ட உதவும்படி கேட்டார். யாரும் பணம் கொடுக்கத் தயாராக இல்லை. எனவே தனக்கு தெரிந்த வித்தையை பயன்படுத்தி செம்பை, தங்கமாக மாற்றினார். அதை விற்று கிடைத்த பணத்தில் கோயில் கட்டும் பணியை தொடங்கினார். அவரது மகிமையை அறிந்த மக்கள் கோயில் கட்ட பணம் கொடுத்தனர். அதன்பின்பு இவ்விடத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியைப் போலவே சுவாமி சிலை அமைத்து, கோயில் எழுப்பப்பட்டது. அலர்மேலுமங்கை தாயாருக்கும் சன்னதி அமைக்கப்பட்டது. சுவாமி, லால்தாஸின் மனதில் பிரசன்னமாக தோன்றி காட்சி கொடுத்தருளினார். பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்றும் பெயர் பெற்றார்.

திருப்பதியில் நடக்கும் பூஜை முறையிலேயே இங்கும் பூஜை நடக்கிறது. மூலஸ்தானத்தில் பஞ்ச பேரர்கள் என்னும் ஐந்து பெருமாள் இருக்கின்றனர். சுவாமி திருமார்பில் 108 லட்சுமி திருவுருவம் பொறித்த மாலை அணிந்திருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு பச்சைக்கற்பூரம் சார்த்தி விசேஷ பூஜை நடக்கிறது.