Monthly Archives: January 2012

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி, (ஆண்டிபட்டி), தேனி மாவட்டம்.

காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேலப்பர்

தலவிருட்சம்

மாமரம்

தீர்த்தம்

மாவூற்று

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

தெப்பம்பட்டி

மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியாக உள்ள இப்பகுதியில் வசித்து வந்த பழியர் இனத்தவர்கள், வள்ளிக்கிழங்கினைப் பயிரிட்டு அதனை தமது உணவாக உண்டுவந்தனர். ஒருமுறை, அவர்கள் தற்போது கோயிலில் வேலப்பர் எழுந்தருளியுள்ள பகுதியில் முளைத்திருந்த வள்ளிக்கிழங்கினை தோண்டினர். அதிக ஆழத்திற்கு தோண்டியும் அக்கிழங்கினை எடுக்க முடியாமல் அதன் வேர் மட்டும் நீண்ட தூரம் சென்று கொண்டேயிருந்தது. தொடர்ந்து தோண்டிய அவர்கள் வேரின் முடிவில் வேலப்பர் சுயம்புவாக வீற்றிருந்ததைக் கண்டனர். பின், அவர்கள் இப்பகுதியை ஆண்ட கண்டமனூர் ஜமீன்தாரிடம் சுயம்புவாக வேலப்பர் இருந்ததைக் கூற, பிற்காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. எழில் பொங்கும் இயற்கை அன்னையின் மடியில் அமைந்துள்ள இந்த ஊற்றில் நீராடி வேலப்பரை மனமுருக வேண்டிக்கொள்ள தீராத பிணிகளும், மனக்குறைகளும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலம் அமைந்துள்ள தெப்பம்பட்டியில் பெரிய தெப்பம் ஒன்று உள்ளது. இத்தெப்பத்திற்கும், இத்தலத்திற்கும் சுரங்கத்தொடர்புகள் இருப்பதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.

அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல்

அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம்.

திருக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

தமிழகத்தின் வனப்புமிகு சுற்றுலாத் தலம் கொடைக்கானல் மலை ஆகும். கோடை காலத்தில் அதன் அழகை ரசித்திட வருவோர், அங்கே குடிகொண்டுள்ள குறிஞ்சி ஆண்டவரை தரிசனம் செய்திடாமல் திரும்ப மாட்டார்கள்.

குறிஞ்சி மலர்மலர்களிலேயே தனிச்சிறப்பு பெற்றது. மலைச்சாரலில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூத்துக் குலுங்கும் தனிச் சிறப்பைப் பெற்றது. அப்போது, மலைச் சாரலிலே, அடுக்கடுக்காய் குறிஞ்சி மலர்கள் அணிவகுத்து நிற்பது போன்ற அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்திடவே மக்கள், கொடைக்கானலுக்கு விரைந்து சென்றிடுவர். அத்தகைய சிறப்பினைக் கொண்ட மலரின் பெயரையே தன்னோடு கொண்டு, முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருக்கோயிலே குறிஞ்சி ஆண்டவர் கோயில்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவுதான். ‘நாயுடுபுரம்சென்று, கோயிலை அடையலாம். நன்கு பராமரிக்கப்பட்டு வரும் அழகிய கோயில். அமைதியான சூழலில் குறிஞ்சி ஆண்டவர் தரிசனம், அற்புதமான மனநிறைவைத் தருவதாகும்.

குறிஞ்சிமலர் பூத்துக்குலுங்கும் பருவத்தில், அந்த மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவருக்கு செய்யப்படும் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, திருக்கோயிலில் தங்கும் விடுதிஒன்றும் உள்ளது. பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தில் அனுமதி பெற்று அங்கு தங்கி, குறிஞ்சி ஆண்டவரை வழிபடலாம்.