Category Archives: நாகப்பட்டினம்

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 223 779, 226 436, 93451 49412, 94422 36436 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாயூரநாதர் (வள்ளலார்)
அம்மன் அபயாம்பிகை, அஞ்சொல்நாயகி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் இடபம், பிரம்ம, அகத்திய தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மாயூரம், திருமயிலாடுதுறை
ஊர் மயிலாடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு, தன் மருமகனான சிவனை அழைக்கவில்லை. எனவே சிவன், அம்பாளை யாகத்திற்கு செல்ல வேண்டாமெனக் கூறிவிட்டார். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன், வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது, யாகத்தில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே, அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி, யாகத்திற்கு வந்ததால் அம்பாளை, மயில் வடிவம் எடுக்கும்படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வேண்டித் தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், “மாயூரநாதர்என்றும் பெயர் பெற்றார்.


இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு, பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது. இங்கு சுவாமி இலிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். சுவாமி சன்னதிக்குப் பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம். சிவனது கௌரி தாண்டவத்தை, “மயூரதாண்டவம்என்றும் சொல்கிறார்கள். இந்த நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இதில் அம்பாள், சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன், அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பது விசேஷமான அமைப்பு. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது.

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-237 650 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீஸ்வரர்
அம்மன் சவுந்தராம்பிகை
தல விருட்சம் வில்வம், சந்தனம்
தீர்த்தம் வேத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவழுந்தூர்
ஊர் தேரழுந்தூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞான சம்பந்தர்

ஒருமுறை பரமேஸ்வரனும், மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில், பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி, பெருமாளுக்கு ஆதரவாக சிவனைக் குறை கூறினார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார். தன்னால் தானே பார்வதி பசுவாக மாறினார் என்பதால், பெருமாள் மாடு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து இவ்வூரில் எழுந்தருளினார். எனவே இவ்வூரிலுள்ள பெருமாளின் பெயர் ஆமருவியப்பன்என்றானது. பசுவாக மாறிய பார்வதி பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு, கடைசியில் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு அழகிய உருவம் பெற்றாள். “சவுந்தர்ய நாயகிஎன இவளை அழைத்தனர். தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் அதற்கான அருளாசி பெறலாம்.

பார்வதியைப் பசுவாக சபித்த சிவன் வருத்தமடைந்து, இங்கு வந்து வேதியர்களுக்கு வேதம் சொல்லித் தந்தார். எனவே இங்குள்ள இறைவனின் திருநாமம் வேதபுரீஸ்வரர்என்பதாகும்.