Category Archives: திருநெல்வேலி

அகத்தீஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம்

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 250 882

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
உற்சவர் அகத்தியர்
அம்மன் லோபமுத்திரை
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, பூமியை சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார்.

பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அவர், பல இடங்களில் சிவபூஜை செய்தார். இவ்வூரிலுள்ள காசிபநாதரை பூஜித்துவிட்டு, பொதிகை மலைக்கு கிளம்பினார். அப்போது அவருக்கு பசி எடுத்தது. அவ்வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவரிடம் தனக்கு அமுது படைக்கும்படி கேட்டார் அகத்தியர். அவர் தன் இருப்பிடத்திற்கு சாப்பிட அழைத்தார். ஆனால், அகத்தியர் அவரிடம் ஒரு புளியமரத்தடியில் காத்திருப் பதாகச் சொல்லிவிட்டார். சிவபக்தரும் அன்னம் எடுத்து வரக்கிளம்பினார். அவர் வருவதற்கு தாமதமாகவே, அகத்தியர் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விட்டார். அதன்பின் சிவபக்தர் சாதமும், அரைக்கீரையையும் சமைத்து எடுத்து வந்தார். அகத்தியர் சென்றதைக் கண்ட அவர், அகத்தியர் உணவை சாப்பிடாமல் தான் இருப்பிடம் திரும்பமாட்டேன் என சபதம் கொண்டார். அகத்தியரை வேண்டி தவமிருந்தார். சிவபக்தரின் பக்தியை மெச்சிய அகத்தியர் அவருக்கு காட்சி கொடுத்து, அன்ன அமுது சாப்பிட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பிற்காலத்தில், அகத்தியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவனருள் பெற்றவர் என்பதால் இவர், “அகத்தீஸ்வரர்என்று பெயர் பெற்றார்.

அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், நாங்குனேரி

அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்,  நாங்குனேரி-627108, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4635-250 119 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்)
தாயார் வரமங்கை தாயார்
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் சேற்றுத்தாமரை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வானமாமலை என்னும் திருவரமங்கை
ஊர் நாங்குனேரி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

மது,கைடபன் என்ற இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்தபோது, அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து, விஷ்ணுவின் அருள் பெற்றாள். “மாசு கழுவப்பெற்றாய்என்று சொல்லி, வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாகத் தல வரலாறு கூறுகிறது. இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது.