Category Archives: திருச்சி

அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தெப்பக் குளம் அருகில், திருச்சி, திருச்சி மாவட்டம்.

+91 431 270 4621 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நந்தீஸ்வரர்
தலவிருட்சம் வில்வம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர் திரிசிராமலை
ஊர் திருச்சி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

பிரதோஷ நேரத்தில் சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிகிறார். அப்போது சிவதரிசனம், சிவாலய பிரதட்சணம் செய்தால் ஒரு சுற்றுக்கு, கோடி சுற்று சுற்றிய பலன் உண்டாகும் என்கின்றனர். இந்த நேரத்தில் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு நடுவிலும், நம் பார்வையை செலுத்தி இறைவனை வழிபட வேண்டும் என்பது நியதி. இந்தக் கோயிலில் நந்தீஸ்வரர் மட்டும் தனித்திருப்பதால், பிரதோஷ வேளையில் இங்கு வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் உபகோயிலாகும். இந்தக் கோயில் பற்றி ஒரு சிலரது கருத்து வேறு மாதிரியாக உள்ளது. இது தாயுமான சுவாமியின் அதிகார நந்தியாக இருந்தது. காலப்போக்கில் கோயிலுக்குச் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டதால், நந்தி மண்டபம் தனிமைப்படுத்தப்பட்டது. அதுவே தனிக்கோயில் போலத் தோற்றமளிக்கிறது என்கின்றனர். தற்போது நந்திக்கு மட்டுமே பூஜைகள் செய்யப்படுகிறது. இங்குள்ள நந்தி ஏழு அடி உயரமும், பத்து அடி நீளமும், 16 அடி சுற்றளவும் கொண்டது. பிரதோஷ காலங்களில் சந்தனக்காப்பு உட்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்கள் துயர் துடைக்க இங்கு வருகின்றனர். நந்திக்கு பின்புறம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 40 அடி உயரத்தில் கல் கொடிமரம் உள்ளது. இதன் மேலும் ஒரு நந்தி சிலை இருக்கிறது. நந்திக்கு பூஜையை தொடர்ந்து இந்த கொடி மரத்துக்கும் பூஜை செய்யப்படுகிறது. கொடிமரத்தின் அடியில் செவ்வந்திநாதர் என்றழைக்கப்படும் செவ்வந்தி விநாயகர் சன்னதி மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். அருகில் வீரஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பொதுவாக சிவன் கோயில்களில் இருக்கும் நந்திக்கு பிரதோஷம் நடக்கும். ஆனால், சிவன் இல்லாமல் நந்தி மட்டும் தனித்திருக்கும் இக்கோயிலிலும் பிரதோஷம் சிறப்பாக நடை பெறுகிறது.

அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை

அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை, திருச்சி மாவட்டம்.

+91- 4332 – 267 586 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நல்லாண்டவர் என்ற மாமுண்டி
தல விருட்சம் காட்டு மின்னை மரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் மணப்பாறை
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

மாயமானை இராமர், “பூண்டிய” (சாய்த்த) இடம் தான் மான்பூண்டி தலமாக விளங்குகிறது. இப்பெயர் மருவி மாமுண்டி ஆண்டவர் திருத்தலமாக விளங்குகிறது என தல வரலாறு சொன்னாலும், மான்பூண்டி வள்ளல் எனும் மாவீரர் ஒருவரின் வரலாறோடும் இத்திருக்கோயில் வரலாறு ஒப்பிடப்படுகிறது.

மந்திர ஆற்றலும், வலிமை படைத்த வீரராகவும் விளங்கியவர் மாவீரர் மாமுண்டியரசர். இவர் கருணை உள்ளத்துடன் இப்பகுதியின் தலைவராக நீதி ஆட்சி செய்ததுடன், கள்வர் கூட்டத்திலிருந்தும் மிருகங்களிடமிருந்தும் இப்பகுதி மக்களை காத்து வந்தார்.ஒரு முறை இத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு வடபகுதியில் உள்ள குளத்தில், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிமார்களும் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கயவர் கூட்டத்தை சேர்ந்த பலர் இவர்களைத் துன்புறுத்தினர். இந்த கயவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றும்படி கதறினர். இவர்களின் கதறலைக்கேட்ட மாமுண்டியரசர் உடனே குதிரை மீது வந்து இவர்களை காப்பாற்றினார்.

சரியான நேரத்தில் வந்து எங்களது அண்ணன் போல் காப்பாற்றினீர்கள். எனவே உங்களை நல்லண்ணன் என அழைப்பார்கள்என நன்றிப்பெருக்குடன் வணங்கினர். அன்றிலிருந்து நல்லண்ணன், நல்லாண்டவர், நல்லையா, மாமுண்டி என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார். நல்லாண்டவரின் வாகனமாக யானையும், காவல் தெய்வமாக புளிகருப்பண சுவாமியும், வாகனமாக குதிரையும் உள்ளது.