Category Archives: திருச்சி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், மணக்கால்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், மணக்கால், திருச்சி மாவட்டம்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கைலாசநாதர்

தாயார்

சிவகாம சுந்தரி

தல விருட்சம்

வில்வ மரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

மணக்கால்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

இங்குதான், (பலா மரப்பலகையில்) மணைக்காலில் அமர்ந்து பிரம்மா, சரஸ்வதி தேவியை மணந்தார். அதனாலேயே இத்தலம் மணைக்கால் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தற்போது மணக்கால் என்றானது. இத்தலத்திற்கு இப்பெயர் வர இன்னொரு காரணமும் உள்ளது. ராமமிஸ்வரர் என்றொரு புனிதர் இருந்தார். தன் குருவான உய்யக்கொண்டார் மீது அபார பக்தி மிக்கவர் அவர். குருவுக்கு தொண்டு செய்வதையே மகாபாக்யமாகக் கருதினார். ஒரு சமயம், உய்யக்கொண்டாரின் புதல்விகள் இருவர் ஆற்றுக்குச் சென்று நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். அது மழைக்காலம் என்பதால் பல இடங்களில் நீர் தேங்கி இருந்தது. பார்த்துப் பார்த்து நடந்தனர் அந்தச் சிறுமியர். ஓரிடத்தில் ஒருபுறம் சற்று பெரிய பள்ளமும், மறுபுறம் சேறும் சகதியுமாக இருந்ததைக் கண்டு, எப்படிக் கடப்பது எனப் புரியாமல் நின்றனர். அப்போது அந்தப் பக்கமாக வந்த ராமமிஸ்வரர் அந்தக் காட்சியைப் பார்த்தார். தமது குருவின் மகள்களின் தவிப்பை உணர்ந்த அவர் கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று அந்தச் சேற்றின் மேல் குப்புறப்படுத்தார். தமது முதுகில் நடந்து அதனைக் கடக்கும்படி அந்தச் சிறுமியிடம் சொன்னார். அவர்களும் அப்படியே நடந்து கடந்து சென்றனர். மணல் படிந்த அவர்களின் பாதச்சுவடுகள் அவரது முதுகில் பதிந்தன. குரு மீது அவருக்கு இருந்த அதீத மரியாதையையும், பக்தியையும் கண்ட மக்கள் அன்று முதல் அவரை மணல்கால் நம்பி என்றே அழைத்தனர். மணல்கால் நம்பி வாழ்ந்த ஊர் என்பதால் இவ்வூருக்கும் மணல்கால் என்ற பெயர் பெறும் பாக்கியம் கிட்டியது.

அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில், காருகுடி

அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில், காருகுடி, தாத்தயங்கார் பேட்டை அருகில், முசிறி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.

+91 97518 94339, 94423 58146 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கைலாசநாதர்

தாயார்

கருணாகர வல்லி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

காருகுடி

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

சந்திர பகவான், கடைசி நட்சத்திர தேவியான ரேவதியை மணந்தார். அவர்கள், சிவனையும், பார்வதியையும் தரிசிக்க விரும்பினர். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு, இத்தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தாள். சிவனுக்கு கைலாசநாதர் என்றும், அம்பாளுக்கு கருணாகரவல்லி என்றும் பெயர் ஏற்பட்டது. கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதிநட்சத்திரத்தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும். தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்குமென நம்புகிறார்கள். விவசாயிகளுக்குரிய கோயிலாக இது விளங்குகிறது.

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதிப்பித்து கட்டியுள்ளான். 1266ம் ஆண்டுகளில் கர்நாடக மன்னன் போசல வீரராமநாதன் என்பவன் இக்கோயில் பூஜைகள் தடையின்றி நடக்க நிறைய நிலங்களை தானம் செய்துள்ளான். 1541, 1619 ம் ஆண்டுகளில் இக்கோயிலுக்காக இராமசக்கவர்த்தி எனும் மன்னன் நிலதானம் செய்துள்ளான். இத்தலத்தின் அருகில் தொட்டியம், குணசீலம், திருஈங்கோய்மலை, உத்தமர் கோவில், திருநாராயணபுரம் ஆகிய திருத்தலங்கள் உள்ளது.