Category Archives: திருச்சி

அருள்மிகு திருநெடுங்களநாதர் (நித்தியசுந்தரேஸ்வரர்) திருக்கோயில், திருநெடுங்களம்

அருள்மிகு திருநெடுங்களநாதர் (நித்தியசுந்தரேஸ்வரர்) திருக்கோயில், திருநெடுங்களம், திருச்சி மாவட்டம்.

+91- 431-252 0126 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்
அம்மன் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி
தல விருட்சம் வில்வம், கஸ்தூரி, அரளி
தீர்த்தம் அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெடுங்களம்
ஊர் திருநெடுங்குளம்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.

திருநெடுங்களம்என்றால் சமவெளியில் அமைந்த பெரிய ஊர்என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார். கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகை கட்டை விரல் இல்லை. காரணம் ஒரு அடியவருக்காக மாறு வேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறிக் காப்பாற்றினார். இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜைசெய்துள்ளார்.

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர்

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்.

+91-431 – 6574 738, +91-98429 – 57568 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எறும்பீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் நறுங்குழல் நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவெறும்பியூர், திருவெறும்பூர்
ஊர் திருவெறும்பூர்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர். அவர் பூலோகத்தில் இத்தலத்தில் குன்றின் மீது சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருப்பதாகவும், இலிங்கத்திற்கு மலர் வைத்து பூஜை செய்து வழிபட்டால் அவர் அசுரனை அழிப்பார் என்றும் கூறினார். அதன்படி தேவர்கள் இத்தலம் வந்தனர். அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர். சிவனின் உச்சியில் (தலையில்) மலர் வைக்க பாணத்தின் மீது ஏறியபோது, இலிங்கம் வழவழப்பாகவும், செங்குத்தாக இருந்ததால் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. தேவர்கள் படும் துயரத்தை கண்ட சிவன், அவர்கள் எளிதாக ஏறிவர, மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு, சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார். பின், தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவன் தலையில் மலர் வைத்து வழிபட்டனர்.

அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாரகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தார். “எறும்பீஸ்வரர்என்ற பெயரும் பெற்றார். கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் இலிங்கமாக இருக்கிறது. எனவே, இலிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். இலிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு இலிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த இலிங்கத்திற்கு சிவசக்தி இலிங்கம்என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம்.