Category Archives: திண்டுக்கல்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி, செங்குறிச்சி போஸ்ட், திண்டுக்கல் மாவட்டம்.

+91-451 – 205 0260, 96268 21366

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணியர்

உற்சவர்

தண்டாயுதர்

தீர்த்தம்

வள்ளி, தெய்வானை தீர்த்தம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

மலைக்கிணறு

ஊர்

திருமலைக்கேணி

மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். அவ்வேளையில் அவரது கனவில் தோன்றிய முருகன் தீர்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி, மன்னர் இங்கு கோயில் எழுப்பினார். மலையில் அடர்ந்த வனத்திற்கு மத்தியில் அமைந்த கோயில் இது. காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால், முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார், கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். பிரதான மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால், பழைய சிலையை இங்கிருந்து எடுக்க முடியவில்லை. எனவே, அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது.

மூலஸ்தானத்தில் முருகன், பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து, ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள். இந்த கோலத்தில் முருகனை தரிசித்தால், தலைமைப் பொறுப்புள்ள பதவி கிடைக்கும் என்கிறார்கள். உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், “மலைக்கேணி” (கேணி கிணறு) என்று பெயர் பெற்றது.

அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல்

அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம்.

திருக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

தமிழகத்தின் வனப்புமிகு சுற்றுலாத் தலம் கொடைக்கானல் மலை ஆகும். கோடை காலத்தில் அதன் அழகை ரசித்திட வருவோர், அங்கே குடிகொண்டுள்ள குறிஞ்சி ஆண்டவரை தரிசனம் செய்திடாமல் திரும்ப மாட்டார்கள்.

குறிஞ்சி மலர்மலர்களிலேயே தனிச்சிறப்பு பெற்றது. மலைச்சாரலில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூத்துக் குலுங்கும் தனிச் சிறப்பைப் பெற்றது. அப்போது, மலைச் சாரலிலே, அடுக்கடுக்காய் குறிஞ்சி மலர்கள் அணிவகுத்து நிற்பது போன்ற அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்திடவே மக்கள், கொடைக்கானலுக்கு விரைந்து சென்றிடுவர். அத்தகைய சிறப்பினைக் கொண்ட மலரின் பெயரையே தன்னோடு கொண்டு, முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருக்கோயிலே குறிஞ்சி ஆண்டவர் கோயில்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவுதான். ‘நாயுடுபுரம்சென்று, கோயிலை அடையலாம். நன்கு பராமரிக்கப்பட்டு வரும் அழகிய கோயில். அமைதியான சூழலில் குறிஞ்சி ஆண்டவர் தரிசனம், அற்புதமான மனநிறைவைத் தருவதாகும்.

குறிஞ்சிமலர் பூத்துக்குலுங்கும் பருவத்தில், அந்த மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவருக்கு செய்யப்படும் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, திருக்கோயிலில் தங்கும் விடுதிஒன்றும் உள்ளது. பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தில் அனுமதி பெற்று அங்கு தங்கி, குறிஞ்சி ஆண்டவரை வழிபடலாம்.