Category Archives: திண்டுக்கல்

அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில், அய்யலூர்

அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில், அய்யலூர், திண்டுக்கல் மாவட்டம்.

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கருப்பணசாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் அய்யலூர்
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் கேரளாவிலிருந்து வணிகர்கள் பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, தமிழகம் வருவது வழக்கம். அப்படியொரு முறை வணிகர் கூட்டம் ஒன்று மாட்டுவண்டியில் வந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் தானாக நின்று போனது மாட்டுவண்டி. அந்த வண்டியின் முன்புறம், பாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த கல், அந்த இடத்திலேயே கருப்பண்ணசாமியாக உருவெடுத்தது. அவரையே காவல் தெய்வமாக எண்ணி மக்கள் கோயில் எழுப்பினர். கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர கருப்பணசாமியை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் பலித்ததும் பக்தர்கள் ஆடு, மாடு, நாய் என எந்தப் பிராணிக்காக வேண்டிக்கொண்டார்களோ, அதன் உருவத்தை மண் பொம்மையாக செய்து எடுத்துவந்து காணிக்கை செலுத்துகிறார்கள். இதையே ஈடு சுமத்துதல் என்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேறவோ, பொருட்கள் களவு போனாலோ, பில்லி சூன்யத்தை முறிக்கவோ வண்டிக் கருப்பருக்கு குட்டமுட்டி அளிப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். வெள்ளாட்டின் கறியை மண்ணால் செய்யப்பட்ட முட்டியில் (கலயம்) வைத்து சமர்ப்பிப்பதையே குட்டிமுட்டி பிரார்த்தனை என்கிறார்கள். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஏழு கிராமங்களும் ஒன்றுகூடி கொண்டாடும் குதிரையெடுப்பு திருவிழா விசேஷம். இதற்காக வைகாசி அல்லது ஆனி மாதத்திலேயே, குளத்தில் களிமண் எடுத்துவந்து குதிரைகள் செய்து வைத்து வழிபட ஆரம்பித்து விடுவார்கள். விழாவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளில், அதிகாலை வேளையில் நிகழும் முனீஸ்வரர் குருதி குடிக்கும் வைபவம் சிலிர்ப்பானது. இந்த ஆலயத்தில் அருளும் முனீஸ்வரருக்கான இந்த வைபம் நிகழும் நேரத்தில், எந்த வாகனமும் கோயிலைக் கடந்து போகக்கூடாது.

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

மூலவர் வீரஆஞ்சநேயர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் அணைப்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின் தென்கரையில் (வைகை ஆற்றின் புராணப்பெயர்) தாழம்பூ புதருக்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாககவும், ஆலயம் அமைத்து வழிபடும்படியும் கூறினார். ஆஞ்சநேயரின் கட்டளைப்படி புதரைச் சுத்தம் செய்து பார்த்த போது சிறிய பாறை தென்பட்டது. அதை தோண்டி எடுக்க முயன்றும் முடியவில்லை. அதுவே வீர ஆஞ்சநேயராக, சுயம்புவாக மாறியது. பின்னர் அந்த இடத்தில் கோயில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

வாயு மைந்தனான ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போதே சூரிய பகவானை பழம் என்று நினைத்து அதைப்பறிக்க வானில் தாண்டிக்குதித்தவர். இராமனின் அடிமையாக திகழ்ந்த இவர் ஸ்ரீராமஜெயம்எழுதுபவர்களைப் பல இன்னல்களிலிருந்து காக்கிறார். இராமாயணமோ அல்லது இராமனின் பெருமைகளோ கூறும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார். அந்த அளவுக்கு இராமர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.