Category Archives: சென்னை

அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம்

அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நரசிம்ம ஆஞ்சநேயர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வரதராஜபுரம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு சிற்பியை நாடினார்கள். அவர் மும்முறை முயன்றும் நரசிம்மர் திருவுருவமே சிலையில் தென்பட்டிருக்கிறது. உடனே காஞ்சி மகாபெரியவரை அணுகி, விஷயத்தை கூறினர். சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்த அவர், வடிவமைக்கப்போகும் தெய்வத்திருமேனிக்கு நரசிம்ம ஆஞ்சநேயர் என திருநாமம் சூட்டுமாறு கூறி ஆசிர்வதித்தார். அதன்பின் வடிவமைக்கப்பட்ட சிலையில் நரசிம்மர் வடிவும் ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுக வடிவமாக இணைய நரசிம்ம ஆஞ்சநேயராக எழுந்தருளினார்.

முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் இலட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.

அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில், வண்டலூர், இரத்தினமங்கலம்

அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில், வண்டலூர், இரத்தினமங்கலம், சென்னை மாவட்டம்.

+91-94440 20084 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லட்சுமி குபேரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இரத்தினமங்கலம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இந்த விஸ்வாராவின் மகனே குபேரன். இவரது மாற்றாந்தாய்க்கு பிறந்தவனே இராவணன். முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து இராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான். குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை இராணவன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது என்றும், கூறுவதுண்டு. குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார். அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். சிவனுடன் அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், “ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லையேஎன்று எண்ணினான். இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள். குபேரனுக்கு ஒரு கண் போய் விட்டது. பின், அவர் மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் குபேரனை மன்னித்தாள். ஆனால், போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தோன்றும்படி செய்தார் சிவபெருமான். அத்துடன் குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார். அதன்பின், இலட்சுமி தேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள். அதாவது பணத்துக்கும், தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல, அவற்றை கண்காணிப்பது மட்டுமே அவர் பொறுப்பு. கொடுப்பது அன்னை லட்சுமி.