Category Archives: கோயம்புத்தூர்

அருள்மிகு இரத்தினகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி

அருள்மிகு இரத்தினகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91 – 422- 553 5727 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இரத்தினகிரி முருகன்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

சரவணம்பட்டி

மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவனை நோக்கி யுகங்கள் பல கடுந்தவம் இருந்து, அண்டசராசரங்களையும் அழிவிலாது அடக்கி ஆளும்படி வரம் பெற்ற அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது இன்னல்களுக்கு பயந்த தேவர் தலைவன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் அசுரனின் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிவுமறைவாக வசித்து வந்தனர். அப்போது ஓர் முறை இந்திரன் மறைந்திருந்ததைக் கண்ட அசுரன் அவரை துன்புறுத்துவதற்காக வந்தான். இதனை அறிந்த இந்திரன் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அவ்வாறு ஓடி வந்த அவர் இரத்தினகிரி மலையின் மீது ஏறி மறைந்து கொள்ள இடம் தேடினார். அப்போது அங்கு இந்திரனுக்கு காட்சி தந்த குமரக்கடவுள் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றிக் கொண்டார். அங்கு இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றான். இவ்வாறு அசுரனிடமிருந்து இந்திரனைக் காப்பதற்காக அவரை தனது மயில் வாகனமாக முருகன் மாற்றிக்கொண்ட அற்புதம் நிகழ்ந்தது இந்த இரத்தினகிரி மலையில் என புராண வரலாறு கூறுகிறது.

பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார். தினசரி இரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி, கடும் விரதம் மேற்கொண்டார். ஓரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் இரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார். அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அப்பெண் கருவுற்றார். அதன் பின்பே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் தான் என அறிந்து கொண்டார். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம்.

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை, புஞ்சைபுளியம்பட்டி வழி, மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4254 – 287 418, 98659 70586

(மாற்றங்களுக்குட்பட்டவை)

திங்கள், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய நாட்களில் காலை 11 – மாலை 6 மணி வரையில் சுவாமியை தரிசிக்கலாம். இதுதவிர மார்கழி மாதம் மற்றும் முருகனுக்கான விசேஷ நாட்களில் நடை திறந்திருக்கும். பிற நேரங்களில் செல்ல விரும்புவோர் முன்னதாக போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

மூலவர்

ஓதிமலையாண்டவர்

உற்சவர்

கல்யாண சுப்பிரமணியர்

தலவிருட்சம்

ஒதிமரம்

தீர்த்தம்

சுனை தீர்த்தம்

ஆகமம்

சிவாகமம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

இரும்பறை

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திர விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை துவங்கினார். அப்போது படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் அவரது அமைப்பில் ஐந்து முகங்களுடன் இருந்து உலகைப் படைத்தார். இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம்எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார். சுவாமிமலை தலத்தில் சிவனுக்குப் பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இத்தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு ஓதிய (உபதேசம் செய்த) மலை என்பதால் தலம், “ஓதிமலைஎன்றும், சுவாமி ஓதிமலையாண்டவர்என்றும் பெயர் பெற்றார்.