Category Archives: கோயம்புத்தூர்

அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், காரமடை

அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், காரமடை – 641 104, மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4254 – 272 318, 273 018 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அரங்கநாதர்
உற்சவர் வெங்கடேசப்பெருமாள்
தாயார் ரங்கநாயகி
தல விருட்சம் காரைமரம்
தீர்த்தம் பிரம்ம, கருட மற்றும் அஷ்டதீர்த்தம்
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அரங்கவெங்கடேச அச்சுதன்
ஊர் காரமடை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் கருடாழ்வாருக்கு திருமால், மகாலட்சுமியின் திருமணக்கோலம் காண வேண்டுமென ஆசை எழுந்தது. அதனை சுவாமியிடம் தெரிவித்தார். அவர் விருப்பத்திற்காக சுவாமி, பூலோகத்தில் இத்தலத்தில் திருமணக்கோலம் காட்டியருளினார். அவருக்கு காட்சி தந்த சுவாமி, இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். முன்னர், இப்பகுதி காரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இப்பகுதியில் வசித்த இடையன் ஒருவன் பசுக்கள் மேய்த்து, வந்தான். அதில் ஒரு பசு மட்டும் தொடர்ந்து பால் சுரக்காமல் இருக்காமல் இருக்கவே, அதனை கண்காணித்தான். ஓரிடத்தில் காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது பால் சொரிந்ததைக் கண்டான். அப்புதரை அவன் வெட்டியபோது, ரத்தம் பீறிட்டது. தகவல் தெரிந்த மக்கள் இங்கு வந்தபோது அசரீரி தோன்றி, சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிருந்ததை உணர்த்தியது. அதன்பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது. ராமானுஜர், கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் தலத்திற்கு சென்றபோது இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். திருப்பதியில் மலையப்பசுவாமி(வெங்கடாஜலபதி) மலையிலும், அலர்மேலுமங்கைத்தாயார் அடிவாரத்திலும் காட்சி தருகின்றனர். ஆனால் இத்தலத்தில் சுவாமி கீழேயும், அருகிலுள்ள மலையில் ரங்கநாயகி தாயாரும் காட்சி தருகின்றனர். இவளை, “பெட்டத்தம்மன்என்று அழைக்கிறார்கள். சுவாமி, இந்த தாயாரையே திருக்கல்யாணம் செய்து கொள்வதாக ஐதீகம். மாசி பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளில், இக்கோயிலில் இருந்து அர்ச்சகர் மலைக்கோயிலுக்குச் சென்று, கும்பத்தில் தாயாரை ஆவாஹனம் செய்து(எழுந்தருளச்செய்து) கோயிலுக்கு கொண்டு வருகிறார். அப்போது பெருமாள் சன்னதியில் இருந்து இராமபாணத்தை வெளியில் கொண்டு சென்று தாயாரை வரவேற்கும் வைபவம் நடக்கிறது. அதன்பின் கலசத்தை மூலஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றனர். மறுநாள் அதிகாலையில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது.

அருள்கு அரங்கநாதர் திருக்கோயில், பாலமலை

அருள்கு அரங்கநாதர் திருக்கோயில், பாலமலை, கோயம்புத்தூர் மாவட்டம்

ஊரின் நடுவில் உள்ள சமதளத்தில் கோயில் கட்டுவதே கடினம். பொருள் தேடி, ஆள் தேடி, அவர்களை ஒன்று திரட்டித் திருப்பணி செய்ய ஆண்டுகள் பலவாகும். இது இப்படியிருக்க, மலையுச்சியில் கோயில் கட்டுவது என்பது எத்துனை கடினம். ஆட்களை மலையுச்சிக்கு கொண்டு செல்லவேண்டும்; அவர்களுக்கு உணவு தயாரிக்கவேண்டும்; அதற்கு அரிசி முதலிய உணவுப் பண்டங்களை மேலேற்றவேண்டும்; அதற்கும் ஆட்படை வேண்டும்.

சரி. இவ்வளவையும் செய்து கோயில் கட்டியாகிற்று. தினசரி பூசை செய்ய தினம் பூசாரி மேலே போய்த் திரும்பி வரவேண்டும். இவ்வளவு உயரத்தில் ஆண்டவன் அமர்ந்திருக்கின்றானே! எப்படி மல ஏறுவது? என்று அங்கலாய்க்கும் இக்காலத்துப் பக்தர்களைப் போலன்றி மக்கள் எவ்வாறு மேலே சென்று இறைவனை வணங்கினார்கள். இவ்வாறெல்லம் எண்ணும்போது மலைப்பாக உள்ளது.

சித்தர்கள் தாங்கள் வணங்குவதற்காக மலைக்கு மேல் இறை வடிவங்களை பிரதிஷ்டை செய்தார்கள் என்று சித்தர் புராணங்கள் கூறுகின்றன. தவம் இருந்த முனிவர்களும் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட சில அன்பர்களும் இத்தகைய பிரதிஷ்டைகளை வெவ்வேறு காலகட்டங்களில் செய்துள்ளார்கள்.

இத்தகைய கோயில்களில் ஒன்றுதான் பாலமலை ஸ்ரீஅரங்கநாதர் திருக்கோயில்.

கோவையில் இருந்து மேட்டுபாளையம் வழியாக ஊட்டிக்குச் செல்லும் சாலையில் வரும் ஊர், பெரியநாயக்கன்பாளையம். பெரியநாயக்கன்பாளையத்துக்கு நேர்மேற்கே சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மிதமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. ஆலயத்துக்கு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், அரங்கன் ஆலயத் திருவிழாக்களில் காட்டும் பங்கும் பக்தியும் பாராட்டிற்குறியது.

கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்த மலைவாசிகள், நகரத்துக்குத் தான் செல்லவேண்டும்.

யுகம் யுகமாக, எண்ணற்ற பக்தர்களுக்கும், மகான்களுக்கம், மன்னர்களுக்கம் அருள்பாலித்தவர் இந்த அரங்கன்.