Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்

வாஸ்து குறைபாடு நீங்க

வாஸ்து குறைபாடு நீங்க

வாழ்க்கை வளமாக அமைய வாஸ்து சாஸ்திரம், நமக்கு வழிகாட்டுகிறது. வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, நிருதி ஆகிய மூலைகளில் இருக்கவேண்டிய, இருக்கக்கூடாத பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.
ஈசான மூலை (வடகிழக்கு) வழியே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது.
வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது.
வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம். ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும். பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும்.

அக்னி மூலைதென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை, எரிவாயு போன்றவை) இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு, கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.
செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர(வடக்கு) மூலை, நிருதி (தென்மேற்கு)மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும். சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும். வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும். எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே. தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில் அமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான,
அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.
கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். நிருதியில்(தென்மேற்கில்) படுக்கையறையை ஒட்டி கழிப்பறை அமைக்கலாம்.
கழிவுத்தொட்டி கண்டிப்பாக வடமேற்கில் தான் இருக்க வேண்டும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம். பொதுவாக வீட்டில் எந்த இடங்களில் எடைமிக்க பொருட்களை வைக்கலாம் என்பதற்கும் நியதி உண்டு.

  • சுபதினம்

இதுபோல 10008 வகை கண்டிஷன்கள். இதில் ஏதவதொன்று சரியாக அமையாவிடில் போச்சு. வாஸ்து சாத்திரக்கரர்கள் அதனால்தான் உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் கெட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பரிகாரம் செய்யவேண்டும். நான் வந்து பார்க்கக் கட்டணம் இவ்வளவு; பரிகாரம் செய்யக் கட்டணம் இவ்வளவு; என்று காசைக் கரந்துவிடுவார்கள்.” எச்சரிக்கை.

மனையடி சாஸ்திரம் புத்தகம் வாங்குங்கள். முடிந்தவரை அதில் சொல்லியபடி வீடு கட்டுங்கள். அதில் கோளாறு; இதில் கோளாறு என்று சொல்லுபவர்களின் சொற்களைக் காதில் வாங்காதீர்கள். வாழ்வில் நல்லதும் நடக்கும்; கெட்டதும் நடக்கும். வாஸ்து சரியில்லாததால்தான் கெட்டது நடக்கிறது என நம்பாதீர்கள்.

இறைநம்பிக்கை இருப்பின் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வேண்டிக்கொள்ளுங்கள்.

அக்னிபுரீஸ்வரர் அன்னியூர் திருவாரூர்
அக்னிபுரீஸ்வரர் திருப்புகலூர் திருவாரூர்
மகாலிங்கேஸ்வரர் விராலிப்பட்டி திண்டுக்கல்
பூமிநாதர் மண்ணச்சநல்லூர் திருச்சி

வயிற்று வலி நீங்க

வயிற்று வலி நீங்க

அடிக்கடி வயிற்று வலி வந்தால் குடற்புண் அல்லது அல்சர்ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அல்சர் மட்டுமே வயிற்று வலிக்கு பொதுவான காரணமாகாது. ஒரு சிலர் அல்சர் பிரச்சினைக்கு 5 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வருகிறேன்; ஆனால் இன்னமும் குணமாகவில்லை என்று கூறுவார்கள்.
வயிற்று வலிக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் முன் சிறுகுடல் புண் பிரச்னை. முன் சிறுகுடல் பகுதியில் புண் (டியோடினல் அல்சர்) ஏற்படுகிறது. சிலர் அல்சர் என தாங்களே முடிவு செய்து கொண்டு, மருந்துக் கடைகளுக்குச் சென்று சுயமருத்துவம் செய்வதோடு, பெரும் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதித்தாலும் வயிற்றில் வலி வரலாம். குறிப்பாக நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள், தொடர் கணைய அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோயோடு, முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும் (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும்.
எனவே வயிற்று வலிக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தல் மிக முக்கியம். குறிப்பாக உணவுக் குழாய் மற்றும் இரைப்பை இணையும் இடத்தில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். மன உளச்சல் மற்றும் அதிகமான காரம் சாப்பிடுவதால் இந்தப் பிரச்னை தீவிரமாகும்.
உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களாகும். உணவுக்குப் பின் அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் குடல் பிரச்னை குறிப்பாக சுருக்கம் மற்றும் புற்றுக் கட்டியாக இருக்கக்கூடும்.
பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்று வலிக்கு புற்று நோய் காரணமாக இருக்கக்கூடும். மலக்குடலில் ஏற்படும் புற்று நோய் காரணமாக வயிற்று வலி, மலத்தில் ரத்தம் மற்றும் வயிற்றுப் பெருக்கம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.

அல்சர் மட்டுமே உள்ள நோயாளிக்கு அதிகமாகப் பசி எடுக்கும். உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி குறையும். வயிற்று வலி மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியாகக்கூட இருக்கலாம். எனவே வயிற்று வலி என்ற உடனேயே அல்சர் என்று கருதி, சுய மருத்துவம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றில் குடல்வாலிலிருந்து மலக்குடல் வரையிலுள்ள பெருங்குடலில் எரிச்சலுடன் தோன்றும் வலி, மருத்துவத்தில் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்என்று அழைக்கப்படுகிறது. இதனால் தசைகள் இழுத்துக் கொள்ளுதல், அடிவயிற்றில் வலி, வாயுவினால் வயிறு உப்புதல், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் பொதுவாக ஏற்படுகின்றன. வயிற்று வலி தொடரும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப் பகுதி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளைச் செய்து கொள்தல் அவசியம். தேவைப்பட்டால் சி.டி. பரிசோதனை பரிந்துரைக்கப்படும். எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யாமல் வயிற்று வலிக்கு அல்சர்காரணம் என யாரும் நினைக்க வேண்டாம்.

வயிற்றுவலி நீங்க:

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்தக் கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

12 மிளகு, பாதியளவு பூண்டு, 5 வேலிப்பருத்தியின் நுனிக் கொழுந்து இவைகளை நன்றாக மை போல அரைத்துக் காலையில் மட்டும் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சூதக வயிற்று வலி குறையும்.

திருநாவுக்கரசர் எழுதியுள்ள பதிகம் பாடினால் வயிற்றுவலி நீங்கும் எனப் பக்தர்கள் நம்புகின்றனர். முடிந்தால் முயலுங்கள். இல்லையெனில் விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் உள்ள அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டால் வயிற்றுவலி தீர்ந்துவிடுமென பக்தர்கள் கூறுகின்றனர்.