Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருமணிமாடக்கோயில், திருநாங்கூர்

அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருமணிமாடக்கோயில், திருநாங்கூர் – 609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 256 424, 275 689, 94439 – 85843 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பத்ரிநாராயணர்
உற்சவர் அளத்தற்கரியான், நரநாராயணர்
தாயார் புண்டரீக வல்லி
தல விருட்சம் பலா
தீர்த்தம் இந்திர புஷ்கரிணி
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பலாசவனம்
ஊர் திருநாங்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

பார்வதியின் தந்தையாகிய தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு செல்ல வேண்டாம் என பார்வதியை தடுத்தார் சிவன். ஆனாலும் நியாயம் கேட்பதற்காக யாகத்திற்கு சென்றுவிட்டாள் பார்வதி. கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார்.

அப்போது சிவனது திருச்சடை முடி தரையில் பட்ட இடங்களில் எல்லாம் சிவ வடிவங்கள் தோன்றின. இவ்வாறு 11 சிவ வடிவங்கள் தோன்றி அனைத்தும் தாண்டவம் ஆடின. இதனால் உலக உயிர்கள் கலக்கமடைந்தன. அச்சம் கொண்ட மகரிஷிகள், தேவர்கள், சிவனைச் சாந்தப்படுத்தும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர் பத்ரி நாராயணராக 11 வடிவங்கள் எடுத்து சிவன் முன்பு வந்தார். நாராயணரைக் கண்ட சிவன் தாண்டவத்தை நிறுத்தினார். பின் அவர் 11 சிவ வடிவங்களையும் ஒன்றாக ஐக்கியப்படுத்தினார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்தது என தலவரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு 11 பெருமாள் கோயில்களும், 11 சிவாலயங்களும் இருக்கிறது. 11 பெருமாள்களுக்கும் பத்ரி நாராயணரே பிரதானமானவராக இருக்கிறார். இவர் ஒருவரை தரிசனம் செய்தாலே அனைவரையும் தரிசனம் செய்த பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.

அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருநகரி

அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருநகரி-609 106, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364-256 927, 94433 72567 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அழகிய சிங்கர்(இலட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்
உற்சவர் திருவாலி நகராளன்
தாயார் பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் இலாட்சணி புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஆலிங்கனபுரம்
ஊர் திருவாலி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது, இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம்(அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திருஆலிங்கனம்என்ற பெயர் பெற்று திருவாலி” (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. குலசேகர ஆழ்வார் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். ஆலிநாட்டின் குறுநில மன்னனாகத் திருமங்கை ஆழ்வார் திகழ்ந்தார். எனவே அவருக்கு ஆலிநாடன்என்ற பெயர் உண்டாயிற்று.