Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு நாண்மதியப்பெருமாள், தலைச்சங்க நாண்மதியம் (தலச்சங்காடு)

அருள்மிகு நாண்மதியப்பெருமாள், தலைச்சங்க நாண்மதியம் (தலச்சங்காடு)-609107 நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 99947 29773 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாண்மதியப்பெருமாள்
உற்சவர் வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி
தாயார் தலைச்சங்க நாச்சியார்
தீர்த்தம் சந்திர புஷ்கரணி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் தலச்சங்காடு
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, அதிலிருந்து மகாலட்சுமிக்கு முன்னதாக தோன்றியவர் சந்திரன். இவர், இலட்சுமியின் அண்ணன் ஆவார். நவகிரகத்தில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். அத்திரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்கள் கூறுகிறது. சந்திரன் மிக அழகானவர். இவர் தேவகுருவிடம் கல்வி கற்று, பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு முறை மகாவிஷ்ணுவை குறித்து ராஜசூய யாகம்செய்தார். சகல வெற்றிகளையும் தரும் இந்த யாகத்திற்கு ஏராளமான முனிவர்கள் வந்திருந்தனர். இவர்களுடன் தேவகுருவின் மனைவி தாரையும் வந்தாள். சந்திரனும், தாரையும் நேருக்கு நேர் பார்த்ததும் இருவரும் விரும்பத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த குரு, திருமாலிடம் முறையிட்டார். சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாதவராக அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட்டார். இதற்கிடையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் என்ற குழந்தை பிறந்தது. பின்னர் திருமால் கூறியபடி குருவிடம் மனைவியை ஒப்படைத்தான் சந்திரன். தந்தை மீது புதனுக்கு வெறுப்பு ஏற்பட்டு, இமயமலையில் கடும் தவம் செய்து கிரக பதவியடைந்தான்.

இதைத்தவிர சந்திரன் இன்னொரு தவறும் செய்து விட்டான். தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனைத் திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,”உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழுச் சந்திரன் தேய தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைத்தது. வருத்தமடைந்த அவன் திருமாலிடம் சென்று தன் குறையை கூறினான். அதற்கு பெருமாள்,”சந்திரனே. நீ உடனே ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்கநாண்மதியம் ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி என்னை வழிபட்டால் உன் சாபம் நீங்கும்என்றார். அவர் கூறியபடி ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் சென்று வழிபட்ட சந்திரன், கடைசியாகத் தலைச்சங்காடு வந்து குளத்தில் நீராடிப் பெருமாளை வழிபட்டான். உடனே அவனுக்கு ஏற்பட்ட தோஷமும், நோயும் விலகியது. பெருமாள் அவனுக்கு காட்சி கொடுத்து அவனை அப்படியே தலையில் சூடிக்கொண்டார்.

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி

அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி-611 104, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4365-245 350 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லோகநாதப்பெருமாள், சியாமளமேனிப் பெருமாள்
உற்சவர் தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி, அரவிந்த நாயகி
தாயார் லோக நாயகி
தல விருட்சம் மகிழ மரம்
தீர்த்தம் சிரவண புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருக்கண்ணங்குடி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். “கிருஷ்ணபிரேமை வசிஷ்டாய நாமாஎன்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதைத் தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்துப் பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு, கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெயைக் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர் கண்ணனை விரட்டிச் சென்றார்.

திருக்கண்ணங்குடியை கிருஷ்ணாரண்யம்என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள், கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,”வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்என்றார். அதற்கு ரிஷிகள்,”கண்ணா, நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களைப் பற்றிக்கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதையறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர். கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் கண்ணங்குடிஆனது.